Published:Updated:

கோல்பி ஸ்டீவன்சன்: 30 இடங்களில் எலும்பு முறிவு; 6 வருடத்தில் ஒலிம்பிக் பதக்கம்! #Motivation

Colby Stevensen
News
Colby Stevensen

தலையில் அடிபட்டு கோமாவில் இருந்த, ஒருவன் தன் நம்பிக்கையால் சிகரத்தில் சறுக்கு விளையாடத் தொடங்கினான். இது நம்பிக்கை கொடுக்கும் கதை. கோல்பி ஸ்டீவன்சனின் கதை!

Published:Updated:

கோல்பி ஸ்டீவன்சன்: 30 இடங்களில் எலும்பு முறிவு; 6 வருடத்தில் ஒலிம்பிக் பதக்கம்! #Motivation

தலையில் அடிபட்டு கோமாவில் இருந்த, ஒருவன் தன் நம்பிக்கையால் சிகரத்தில் சறுக்கு விளையாடத் தொடங்கினான். இது நம்பிக்கை கொடுக்கும் கதை. கோல்பி ஸ்டீவன்சனின் கதை!

Colby Stevensen
News
Colby Stevensen

ஒரு வயதே ஆன கோல்பி நிக்கல்சனுக்கு அவரின் தாய் பனிச்சறுக்குப் பலகை ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார். அவன் அதை வைத்து என்ன செய்யபோகிறானென்று தெரியாமல்தான் வாங்கி கொடுத்திருக்கிறார். அமெரிக்காவின் பார்க் சிட்டியில் வளர்ந்த அந்தக் குழந்தை, அங்குள்ள மலைகளின் மேடுகளில் பலகையுடன் நின்றுகொண்டிருக்கிறது. அப்படியே, பனியில் சறுக்குவதற்கு இருக்கும் தடைகளை நோட்டம் விடத் தொடங்கியது. சுற்றும் முற்றும் பார்த்து தயாரானதும் தனது உடை, போர்டுடன் கனவையும் சுமந்துகொண்டு தனது பனிச்சறுக்கலைத் தொடங்கியது அக்குழந்தை. அந்தக் குழந்தைக்குள் இருந்த கனவை அதன் தாயால் காணமுடிந்தது.

தாய் மட்டுமல்ல, அங்கே பயிற்சி பெறும் பல சாம்பியன் வீரர்கள் கண்களுக்கும் அது படாமலில்லை. பதின் பருவத்தின் தொடக்கத்தில், சாம்பியன் வீரர்கள் செய்வதைப் பார்த்து அவர்களைப் போலவே செய்ய பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறான் கோல்பி. பார்க் சிட்டியின் மலைகளில் பரவிக்கிடக்கும் பனியில் எந்த மூலையிலும் கோல்பியைத் தடுக்கும் தடுப்பணை இருப்பதாகத் தெரியவில்லை. மலைகளில் சறுக்கும் அந்தச் சிறுவனுக்காக சிகரம் காத்துக்கொண்டிருந்தது. ஆனால், "Life is what happens to us when we are busy making other plans" என்னும் ஜான் லென்னானின் வாக்கியத்திற்கு ஏற்ப, கோல்பியும் ஒரு கொடூரத்தைச் சந்தித்தார்.

2016-ம் ஆண்டு. 16 வயது. காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது நெடுநேர பயணத்தினால் அசதியில் சற்றே கண்ணயர்ந்தார் காரை ஒட்டிய கோல்பி. அப்போது நிகழ்ந்த விபத்தில், அவரது உடம்பில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது மண்டையோட்டில் 8 இடங்களில் முறிவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட வலதுபுற மண்டையோடு முழுவதும் பலத்த காயமடைய, 3 நாட்களுக்கு செயற்கையாக கோமாவில் வைக்கப்பட்டார். தான் வாங்கிக்கொடுத்த பனிச்சறுக்கு பலகையுடன் வீட்டில் காத்திருந்த தாயும், சிம்மாசனத்தை ஒதுக்கி வைத்திருந்த சிகரமும், அன்பை அள்ளிக் கொடுக்கத் தயாராயிருந்த அன்பு உள்ளங்களும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றத்திலும், சோகத்திலும் ஆழ்ந்தன.

எனினும் கோல்பி உயிர்பிழைத்தார். அப்போது எந்த மனநிலையில் அவர் மருத்துவரிடம் அந்தக் கேள்வியை கேட்டாரெனத் தெரியவில்லை. "நான் மறுபடியும் பனிச்சறுக்கு விளையாடலாமா டாக்டர் ?" . டாக்டர் சிரித்துக்கொண்டே "இவ்வளவு அடிபட்டும் மூளைக்கு எந்த ஆபத்தும் வராமல் பிழைத்துள்ளீர்கள். ஏன் விளையாடக்கூடாது?!", என்று உற்சாகமாகப் பதிலளித்தார். அப்போது கோல்பியின் மனதில் ஒன்றே ஒன்றுதான் இருந்திருக்க வேண்டும். நம்பிக்கை! ஷாஷன்க் ரிடம்ப்ஷன்ன் படத்தில் ஒரு வசனம் வரும். "Hope is a good thing. May be the best of things. And no good thing ever dies"

Colby Stevensen
Colby Stevensen

ஆனால் படுக்கையிலிருந்து மீள்வதே அவருக்கு சுலபமான காரியமாக இல்லை. ஒவ்வொரு நாளும் நரகத்திலிருப்பது போல வாழ்ந்து, 6 மாதங்களை கடத்தி இறுதியாக படுக்கையிலிருந்து மீண்டார் கோல்பி. பின்னர் அடி அடியாகப் பனியில் கால்தடத்தைப் பதித்தார். அத்தகைய கொடூரத்திற்குப் பின்னர் மீண்டும் விளையாடத் தொடங்க ஒரு அதிபயங்கர நெஞ்சுரம் வேண்டும். மனதில் அத்தகைய உறுதி இருந்தால் மட்டுமே அதை நினைத்துக்கூட பார்க்க முடியும். அது கோல்பிக்கு இருந்தது. இதுமாதிரியான சம்பவங்கள் வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றியமைக்க வல்லவை. காலையில் கண்விழித்து, குளித்துவிட்டு ஒரு சறுக்குக்கு செல்வதோ, அல்லது இந்த உலகத்தில் உயிரோடு இருப்பதுவே ஒரு தலைசிறந்த ஆசீர்வாதமாகக் கருதுவதாகக் கூறினார் கோல்பி.

அதே சமயம் இத்தகு சம்பவம் வாழ்க்கையில் பெரும் உந்துதலையும் அளிக்கும். நமது கனவுகளை ஏன் துரத்தக்கூடாது என்ற கேள்வியையும் அதற்கு பதில் ஒன்றே இல்லாதது போன்ற மனநிலையையும் அளிக்கும். "உங்களுக்கு அப்படி ஒரு கொடூரம் நடந்தும் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள் என்றால், நீங்கள் உங்கள் கனவை துரத்தாமலிருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அதை பின்தொடர்ந்து செல்லுங்கள் முன்னர் இருந்ததைவிட அதிக வெறியுடன், உந்துதலுடன் செயல் படுவீர்கள்" என்றார் கோல்பி. பனிமூட்டம் விலகி சிகரம் அவர் கண்ணுக்கு தெரிய தொடங்கியது. உற்சாக குரல்களும் ஆதரவுக் கரங்களும் அவரை பனியில் தள்ளிவிட தயாராக இருந்தனர். அப்படித்தான் 24 வயதில் 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் தனது பலகையுடன் வழியில் இருக்கும் தடைகளை நோட்டம் விட்டுக்கொண்டு நின்றிருந்தார் கோல்பி ஸ்டீவன்சன்.

உலகத்தின் பார்வையே அவர்பால் இருக்க, கோல்பியின் பார்வை சிகரத்தின்மீதே இருந்தது. போட்டி தொடங்கியதும் சீறிப்பாய்ந்த கோல்பி முதல் முறையில் பாதியிலேயே தடுமாறி கீழே விழுந்தார். கோல்பி அவரது மனநிலையை குறித்து முன்னர் ஒருமுறை பேசியபோது, " நான் மீண்டும் இந்த விளையாட்டை விளையாடத் தொடங்கியதும் இத்தகைய உயர்ந்த நிலையில் போட்டியிடுவதையுமேயே மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகக் கருதுகிறேன். அத்தகைய மனநிலை இருப்பதால் அதை விட அதிகமான சாதனைகள் தானாக நடைபெறும்" என்றார்.

Colby Stevensen
Colby Stevensen

அத்தகைய மனநிலையுடனும், அன்றும் அவருடன் இருந்த நம்பிக்கையுடனும் அடுத்த சறுக்கலை தொடங்கினார் கோல்பி. மூன்றாவது சறுக்கலை முடிக்கும்போது , அவரே எதிர்பாராத வகையில் அவர் தன்னுடைய சிறந்த ஆட்ட வகையாக எண்ணிடாத பிக் ஏரில் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச்சென்றார். சிகரத்தின்மீது காத்துக்கொண்டிருந்த நாற்காலி நிரப்பட்டது. காத்துக்கொண்டிருந்த கரங்கள் ஒலிக்கத் தொடங்கின. அழுதுகொண்டிருந்த தாய் புன்முறுவல் புரிந்தாள். கோல்பி தன் கண்களை ஒருமுறை மூடி திறந்தார். அவருக்கு இப்போதும் எந்த தடையும் கண்களுக்கு தெரியவில்லை. ஒரு கனவு, ஒரு பயணம், ஒரு சகாப்தம்... கோல்பி ஸ்டிவென்சனின் இந்த சாதனை என்றும் நமது தோள்களில் ஓரத்தில் ஒரு கையாக நம்மை தட்டி கொடுத்து மேல் எழுப்ப உடன் இருக்கும்.