ரஞ்சி கோப்பை தொடரில் கோவா அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் சதம் விளாசியிருந்தார். சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் சதம் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், "நான் இந்தியாவிற்காக விளையாட ஆரம்பித்த போது என் தந்தையை, சச்சினுடைய தந்தை என அறிமுகப்படுத்துவார்கள். அதுகுறித்து என் தந்தையிடம் அவரது நண்பர் உன் மகனின் பெயரை வைத்து நீ அறிமுகப்படுத்தப்படுவதை எப்படி எடுத்து கொள்கிறாய் என்று கேட்டப்போது அதற்கு என் தந்தை தன் வாழ்நாளில் சிறந்த தருணம் என்று கூறி பெருமைப்பட்டுள்ளார்.

எனவே எந்த ஒரு தந்தைக்கும் தங்கள் குழந்தைகள் சாதிப்பது பெருமைதான். அர்ஜுன் டெண்டுல்கரை பொறுத்தவரை என் மகன் என்பதால் அவருக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது. ஆனால் நான் சிறுவனாக இருந்தப்போது எனக்கு எந்த ஒரு அழுத்தமும் ஏற்படவில்லை. நான் சுதந்திரமாக விளையாடினேன். தற்போது அர்ஜுனுக்கு தரும் அழுத்தங்களை அவர் சவாலாக எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும் என்று நான் பலமுறை அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.