புரோ கபடி 9-வது சீசனில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டிருந்தது. பலம் வாய்ந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ,தபாங் டெல்லி அணிகளை மிகப்பெரிய புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று நம்பிக்கைக் கொடுத்திருந்தது தமிழ் தலைவாஸ். இந்த ஆட்டத்திலும் அதே பெர்ஃபார்மன்ஸைக் கொடுத்த தமிழ் தலைவாஸ் கடைசி நிமிடங்களில் சொதப்பலான ஆட்டத்தினால் 41- 41 என போராடி ஆட்டத்தை டையில் முடித்திருக்கிறது.
புதிய பயிற்சியாளர் அசன் குமாரின் ஊக்கம், தமிழ் தலைவாஸ் வீரர்களிடமிருக்கும் நம்பிக்கை, அணியின் ஒற்றுமை எனக் களத்தில் வீரர்களின் ஆட்டம் அனல் பறக்கின்றது. ஆனால் வெல்ல வேண்டிய இந்தப் போட்டியை டையில் முடித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.
தமிழ் தலைவாஸ் சூப்பர் ஹீரோ நரேந்தர் கண்டோலா ரெய்டுகளில் அதிரடி ஆட்டத்தை நிகழ்த்தினார். தபாங் டெல்லி அணிக்கு எதிராக 21 ரெய்டுகள் சென்று 27 ரெய்டு புள்ளிகளை எடுத்து செம ஃபார்மில் இருந்தார். இந்தப் போட்டியில் முதல் பாதியிலேயே சூப்பர் 10 எடுத்து பெங்கால் வாரியர்ஸ் டிஃபென்டர்களுக்கு எதிராக சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

முதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் டிஃபன்டர்களால் நரேந்தரை ஒருமுறை கூட டேக்கிள் செய்ய முடியவில்லை. இந்த சீசனில் 5 முறை சூப்பர் 10 எடுத்துச் சிறப்பாக ஆடி வருகிறார் நரேந்தர்.
ஆட்டத்தின் முதல் எட்டு நிமிடங்களிலேயே பெங்கால் வாரியர்ஸ் அணியை ஆல் அவுட் செய்தது தமிழ் தலைவாஸ். பெங்கால் வாரியர்ஸ் ஸ்டார் ரெய்டர் மனிந்தர் சிங்கை அசத்தலான டேக்கிளின் மூலம் பெஞ்சில் உட்கார வைத்தனர் தமிழ் தலைவாஸ் டிஃபன்டர்கள்.
அதிரடி பெர்பார்மன்ஸால் அடுத்தடுத்த இரு ஆல் அவுட் செய்து பெங்கால் வாரியர்ஸ் அணியை அப்செட் ஆக்கியது தமிழ் தலைவாஸ்.
தமிழ் தலைவாஸ் அணியின் மற்றுமொரு அதிரடி ரெய்டரான அஜிங்க்யா பவார் do-or- die ரெய்டு மற்றும் சூப்பர் டேக்கிள் சூழ்நிலையில் பிரஷர் இல்லாமல் விளையாடிப் புள்ளிகளை எடுத்தார். தமிழ் தலைவாஸ் முதல் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹிமான்ஷு சிங் தேவையான நேரங்களில் ரெய்டு புள்ளிகளை எடுத்துக் கொடுத்தார்.
முதல் பாதி முடிவில் 26-11 என தமிழ் தலைவாஸ் 12 புள்ளிகள் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியை விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் விரைவாக புள்ளிகளை எடுத்தனர்.
பெங்கால் வாரியர்ஸ் ஸ்டார் ரெய்டர்கள் மனிந்தர் சிங், தீபக் நிவாஸ் ஹூடா அகியோர் அதிரடியாக விளையாடி ரெய்டு புள்ளிகளை எடுத்தனர். அந்த அணியில் மனிந்தர் சிங் தனி மனிதனாக ரெய்டுகளில் புள்ளிகளை எடுத்தார். இரண்டாம் பாதியில் இரண்டு முறை ஆல் அவுட் ஆனது தமிழ் தலைவாஸ். இது அதன்பின் பெங்கால் வாரியர்ஸ் ஆட்டமாக மாறியது. கடைசி ஐந்து நிமிடங்கள் ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்துக் கொண்டிருந்தனர்.

கடைசி ரெய்டராக களமிறங்கிய அஜிங்கியா பவார் டச் நிகழ்த்தியதை அடுத்து 41-41 என சமமான புள்ளிகளில் ஆட்டம் டை ஆகி முடிந்தது.

தமிழ் தலைவாஸ் டிஃபென்டர்கள் இரண்டாவது பாதியில் மோசமான ஆட்டத்தை ஆடினர். தேவையான நேரங்களில் டேக்கிள்களை நிகழ்த்தாமல் இருந்தது பெங்கால் வாரியர்ஸூக்கு சாதகமாக மாறியது. பெரிய அணிகளுடன் மோதும்போது டிஃபெண்டர்கள் தேவையான டேக்கிள் புள்ளிகளைப் பெற வேண்டும்.
ஆட்டத்தைச் சிறப்பாகத் தொடங்கும் தமிழ் தலைவாஸ் பெரிய புள்ளிகள் வித்தியாசத்தில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. ஆனால் இரண்டாவது பாதியில் கடைசி நிமிடங்களில் சறுக்குகிறது. இந்தப் போட்டியில் கூட முதல் பாதி முடிவில் 12 புள்ளிகள் முன்னிலை வகித்தது தமிழ் தலைவாஸ். ஆனால் கடைசி நிமிடங்களில் இரண்டு முறை ஆல் அவுட் ஆகி டையில் இந்தப் போட்டியை முடித்து இருக்கிறது. முதலில் பெறும் முன்னிலையை ஆட்டத்தின் கடைசிக்கட்டம் வரை தக்க வைத்தே ஆக வேண்டும்.