
பிரகாஷ் படுகோன், புல்லேலா கோபிசந்த், சாய்னா நேவால், பி.வி.சிந்து போன்றவர்களின் வெற்றிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன
இந்திய பேட்மின்டன் வரலாற்றில் ஒரு மகத்தான மைல்கல் எட்டப்பட்டிருக்கிறது. தாமஸ் கோப்பை தொடரில் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறது இந்திய ஆண்கள் பேட்மின்டன் அணி.
பேட்மின்டன் தனிநபர் விளையாட்டாகக் கருதப்பட்டாலும் அணியாக மோதும் தொடர்களும் உண்டு. அதில் தாமஸ் கோப்பை ஆண்களுக்கும், உபேர் கோப்பை பெண்களுக்கும் நடத்தப்படும் தொடர். அணிப் பிரிவில் உலக சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை போன்றவை இத்தொடர்கள். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த தாமஸ் கோப்பைத் தொடரில், இதுவரை இந்திய அணி அரையிறுதியில்கூட நுழைந்தது இல்லை. அப்படிப்பட்ட அணிதான் இப்போது சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.

14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷிய அணியை இறுதிப் போட்டியில் 3-0 என வீழ்த்தி ஒரு மாபெரும் மாற்றத்திற்கு விதையிட்டிருக்கிறார்கள் இந்திய வீரர்கள்.
உலக அரங்கில் பல முக்கிய வெற்றிகளைப் பெற்ற கிதாம்பி காந்த், பிரன்னோய் ஆகியோருடன் இளம் வீரர் லக்ஷயா சென்னும் இணைந்ததால், ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் பலம் பன்மடங்கு கூடியது. ஒலிம்பிக்கில் அசத்திய சத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி இன்னும் அதே உத்வேகத்தோடு பல முன்னணி அணிகளை வீழ்த்தியது. காலிறுதி, அரையிறுதி என ஒவ்வொரு போட்டியிலும் தோல்வியின் விளிம்பிலிருந்து அணியை இவர்கள் மீட்டுக் கொண்டுவந்த விதம், இவர்கள் ஒவ்வொருவரையுமே அடுத்த தலைமுறையின் ஹீரோக்களாக்கியிருக்கிறது.
பிரகாஷ் படுகோன், புல்லேலா கோபிசந்த், சாய்னா நேவால், பி.வி.சிந்து போன்றவர்களின் வெற்றிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன. உலக அரங்கில் சரித்திரம் படைத்த இவர்களைப் பார்த்து அடுத்த தலைமுறை ராக்கெட்டையும் ஷட்டிலையும் கையில் எடுத்தது. தனி நபர்களைப் பார்த்தே இப்படியான மாற்றம் நிகழ்கிறதெனில், ஓர் அணியின் வெற்றி அதைவிடப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
எப்போதுமே ஓர் அணியின் வெற்றி நம்மை அதிகம் ஈர்க்கும். அதுவும், 14 முறை சாம்பியனைச் சாய்த்து ஒரு அண்டர்டாக் பெற்றிருக்கும் வெற்றி, இந்திய பேட்மின்டன் அடுத்த தளத்திற்குப் போகப்போகிறது என்பதைத்தான் உணர்த்துகிறது.