இந்தியா- இலங்கை இடையேயான மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். இந்நிலையில் போட்டிக்குபின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் மைதானத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ராகுல் டிராவிட், "நீங்கள் சிறுவயதாக இருந்தபோது நான் பேட்டிங் செய்ததை பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் என சூர்யகுமார் யாதவிடம் கேட்க, அதற்கு சூர்யாகுமார் யாதவ் சிரித்துக்கொண்டே, "இல்லை, நான் பார்த்திருக்கிறேன்" என்று பதிலளித்திருக்கிறார்.
பின் சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய ராகுல் டிராவிட்,"நீங்கள் ஒரு தனித்துவமான வீரர். உங்களின் பேட்டிங் திறமை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு போட்டியில் நீங்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் அந்த பேட்டிங்கை பார்த்து இதுதான் உங்களின் சிறப்பு என நினைத்தால், அடுத்த போட்டியில் களமிறங்கி அதைவிட சிறப்பாகச் செயல்படுகிறீர்கள்" என்று ராகுல் டிராவிட் சூர்யகுமார் யாதவைப் பாராட்டியுள்ளார்.

உங்கள் 3 டி20 சதங்களில் எதை நீங்கள் சிறந்ததாக பார்க்கிறீர்கள் என்று ராகுல் டிராவிட் கேட்க, அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், "சதங்கள் அடித்த 3 டி20 போட்டியிலும் அணிக்காக நான் நன்றாக விளையாடி இருக்கிறேன். மூன்றுமே எனக்கு முக்கியமான போட்டியாகவே அமைந்தது. விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவிக்கும்போது என்னுடைய சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறேன். முடிந்தவரை என்னுடைய ஆட்டத்தை ரசித்து வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.