2008-இல் தொடங்கிய ஆடவருக்கான IPL கிரிக்கெட் தொடர் இதுவரைக்கும் 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து பெண்களுக்கும் IPL பாணியிலேயே கிரிக்கெட் தொடரை BCCI முதல் முறையாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த தொடர் அடுத்த மாதம் (மார்ச்) 4ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கும் வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்று மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரப்பிரதேச வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

மொத்தம் 1, 525 வீராங்கனைகள் பதிவு செய்திருந்த நிலையில் இறுதிப் பட்டியலில் 246 இந்தியர்கள், 163 வெளிநாட்டவர் என 409 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 5 அணிகளும் சேர்த்து 90 வீராங்கனைகளை தேர்வுசெய்யலாம் என்றும் ஒவ்வொரு அணியும் ரூ.12 கோடி வரை செலவு செய்து 15 முதல் 18 வீராங்கனைகள் வரை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் ஹர்மன் ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஹெய்லே மேத்யூவ்ஸ், கார்ட்னர் உள்ளிட்ட 24 வீராங்கனைகளின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாகவும், தென் ஆப்பிரிக்கா வீராங்கனை மரிஜானே காப், ஷப்னிம் இஸ்மாயில், இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி உள்ளிட்டோரின் தொடக்க விலை ரூ.40 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா ஆகியோர் 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.