வருண் சக்ரவர்த்திக்கு மாற்றுவீரராக ஆஸ்திரேலிய தொடருக்குள் இடம்பிடித்த நடராஜன், இறுதியில் தன் அபாரப் பந்து வீச்சின் மூலம் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று ஃபார்மேட்டிலும் இந்திய அணிக்காக விளையாடினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய நடராஜன், இத்தொடரில் முதல்முறையாக பவர்ப்ளே ஓவரில் விக்கெட் எடுத்த பெளலர் என்கிற பெருமையைப் பெற்றார். லாபுசேன், அஷ்டன் அகார் என இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். டி20 போட்டிகளிலும் இந்தியாவின் முக்கியமான பெளலராக இருந்தார் நடராஜன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அனுபவ பெளலர்கள் பலரும் காயமடைய இந்தியா தொடரை வென்ற பிரிஸ்பேன் டெஸ்ட்டில் நடராஜனுக்கு இடம் கிடைத்தது. இதில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் நடராஜன்.

ஒரே தொடரில் மிகப்பெரிய உயரத்தைத் தொட்டிருக்கும் நடராஜன் இன்று மாலை தனது சொந்த ஊரான சேலத்துக்கு வருகிறார். நடராஜனை வரவேற்க நண்பர்கள் பலரும் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், விழா, வரவேற்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது எனத் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் தடைபோடப்படுவதாக அவரது நண்பர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். "நடராஜனை வரவேற்பதில் அரசுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. மேடை அமைத்தால் கூட்டம் கூடும், கொரோனா பரவும் என்கிறார்கள். தேர்தல் பிரசாரத்தில் எல்லாம் பரவாத கொரோனா, நடராஜனுக்கு வரவேற்பு அளிக்கும்போது மட்டும் எப்படி பரவும் எனத் தெரியவில்லை" என்று கேள்வி எழுப்புகிறார்கள் நண்பர்கள்.
''அரசு நடத்தவேண்டிய விழாவை நாங்கள் நடத்துகிறோம். இதற்கும் தடைபோடுவதில் நியாயம் இல்லை. விழா ஏற்பாடுகளை அரசு தடுக்கக்கூடாது'' என்பதுதான் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.