சன்ரைசர்ஸூக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
187 ரன்களை விரட்டுகையில் கோலியும் டூப்ளெஸ்சிஸூம் இணைந்து 172 ரன்களை அடித்திருந்தனர். விராட் கோலி ஒரு அற்புதமான சதத்தை பதிவு செய்திருந்தார். 63 பந்துகளில் 100 ரன்களை அடித்திருந்தார். ஐ.பி.எல் தொடரில் கோலி அடிக்கும் 6 வது சதம் இதுவாகும். இந்த சதத்திற்காக கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு விராட் கோலி சில முக்கியமான விஷயங்கள் பற்றி பேசியிருந்தார். கோலியின் சதம் எந்தளவுக்கு முக்கியமானதாக இருந்ததோ அதே அளவுக்கு கோலியின் பேச்சும் நேற்றைய நாளின் முக்கிய அம்சமாக இருந்தது.
விராட் கோலி பேசுகையில், 'பயிற்சியில் நான் செய்த சில விஷயங்களை கடந்த 2-3 போட்டிகளில் என்னால் முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. இந்தப் போட்டியில் அப்படியில்லாமல் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆட நினைத்தேன். எதிர்கொள்ளும் முதல் பந்திலிருந்தே பௌலர்களை அட்டாக் செய்து ஆதிக்கமாக ஆட விரும்பினேன். இந்த சீசன் முழுவதுமே அதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. ஆனால், சில போட்டிகளில் அதை செய்ய முடியாமல் சரிவை சந்தித்திருந்தேன். சரியான சமயத்தில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி வலுவான ஆட்டத்தை ஆட வேண்டும் என நினைத்தேன். அது நிகழ்ந்துவிட்டது. சன்ரைசர்ஸூக்கு எதிராக என்னுடைய ரெக்கார்ட் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றார்கள். ஆனால், நான் கடந்து போன விஷயங்களின் மீது எப்போதுமே கவனம் செலுத்தியதில்லை.

என்னுடைய பங்களிப்புகளுக்காக பல சமயங்களில் நான் க்ரெடிட் எடுத்துக் கொண்டதே இல்லை. என்னை நானே ஒருவித அழுத்தத்திற்குள்ளாக்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறேன்.
ஐ.பி.எல் இல் இது என்னுடைய 6 வது சதம். வெளியிலிருந்து பேசுபவர்களை பற்றி எனக்கு கவலையில்லை. அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. நேரடியாக களத்தில் நிற்கும்போது ஒரு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். நான் பல காலமாக என்னுடைய அணிக்காக போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறேன். மேலும், இப்படி ஒரு முக்கியமான ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது எனக்கும் சரி அணிக்கும் சரி பெரும் தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது. '
ஹைதராபாத் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை பற்றி பேசிய கோலி, 'இது எங்களுடைய சொந்த மைதானம் போன்ற உணர்வையே கொடுக்கிறது. ரசிகர்கள் 'RCB...RCB..' என ஆர்ப்பரிக்கிறார்கள். எனக்கும் ஆராவாரம் செய்கிறார்கள். இதையெல்லாம் யாராலும் செயற்கையாக உருவாக்கிவிட முடியாது. நான் யாரையும் என்னை பின் தொடருங்கள். என்னை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள் என வற்புறுத்தவில்லை. ஆனாலும் என் மீது அத்தனை அன்பை செலுத்துகிறார்கள்.

களத்தில் நான் நானாக இருக்கிறேன். நேர்மையாக எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறேன். அதுதான் ரசிகர்களிடையே என்னை கொண்டு சேர்த்திருக்கிறது என நினைக்கிறேன். இத்தனை ரசிகர்களின் முகத்தில் சிரிப்பை உருவாக்கும் இடத்தில் இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.'
டூப்ளெஸ்சிஸூடனான பார்ட்னர்ஷிப் பற்றியுமே கோலி நிறைய பேசியிருந்தார். நாங்கள் குத்தியிருக்கும் டேட்டோஸ்தான் எங்களின் வெற்றி ரகசியம் என ஜாலியாக பேசத் தொடங்கியவர்,
'சர்வதேச அளவில் பெரும் அனுபவம் கொண்ட ஒரு நபரை எங்களின் கேப்டனாக கொண்டிருப்பது நல்ல விஷயம். டீ வில்லியர்ஸூடன் பேட்டிங் ஆடும் போது எவ்வளவு சௌகரியமாக உணர்ந்தேனோ அதே சௌகரியத்தை டூ ப்ளெஸ்சிஸிடமும் உணர்ந்தேன்.

இந்தப் போட்டியிலேயே ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 172 ரன்களை எடுப்போம் என நினைக்கவில்லை. இந்த சீசன் முழுவதுமே எங்கள் கூட்டணி சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. 900 ரன்களை சேர்ந்து அடித்திருப்போம் என நினைக்கிறேன்.' என்றார் கோலி.
சமீபத்தில் கோலி இவ்வளவு வெளிப்படையாக நிறைய விஷயங்களை பற்றி பேசிய நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும்.