கடந்த 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி லீக் என்பதால் ரசிகர்கள் தோனியைக் கொண்டாடித் தீர்த்தனர். அதுமட்டுமின்றி தோனி மைதானத்தைச் சுற்றி வந்து சிஎஸ்கே கேப், ஜெர்ஸி போன்றவற்றை ரசிகர்களுக்கு வழங்கினார்.

அப்போது கிரிக்கெட் ஜாம்பவானும், வர்ணணையாளருமான சுனில் கவாஸ்கர் தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் வாங்கியிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தன. அந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் பேசிய கவாஸ்கர், ``சிஎஸ்கே வீர்ரகளும், தோனியும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன், நானும் அதனை ஒரு மறக்க முடியாதத் தருணமாக அமைத்துக்கொள்ள விரும்பினேன். அதனால் தோனி இருக்கும் இடத்தை நோக்கி ஆட்டோகிராப் வாங்க ஓடினேன். ஏன்னென்றால் இந்த சீசனில் அதுதான் சேப்பாக்கத்தில் அவரின் கடைசிப் போட்டி. நிச்சயமாக சிஎஸ்கே பிளே ஆஃப் தகுதிபெறும் பட்சத்தில் மீண்டும் அவர் வருவார். இருந்தாலும் தோனியிடம் சென்று, நான் அணிந்திருந்த சட்டையில் ஆட்டோகிராஃப் இட சொன்னேன்.

நல்ல வேளை அங்கிருந்த ஒளிப்பதிவாளர் ஒருவரிடம் மார்க்கர் பேனா இருந்தது. தோனி அந்த பேனாவை வாங்கி சட்டையில் ஆட்டோகிராஃப் போட்டார். அது ஒரு நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. இந்திய கிரிக்கெட்டுக்காகப் பல சாதனைகளைச் செய்த ஒருவரிடம் இருந்து ஆட்டோகிராஃப் பெறுவது மிகவும் உணர்ச்சிகரமானது. "நான் இறப்பதற்கு முன் 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் வென்ற உலகக் கோப்பையையும், 2011 ஆம் ஆண்டு தோனி அடித்த சிக்ஸையும் மீண்டும் பார்க்க விரும்புகிறேன்" என்று கலங்கிய கண்களுடன் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.