இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் நடைபெறுவதைப் போல தற்போது தென்னாப்பிரிக்காவில் `SA20' தொடர் நடைபெற்று வருகிறது.
இத்தொடர் ஜனவரி 10ம் தேதி தொடங்கிய நிலையில் இதன் காலிறுதிப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இறுதிப் போட்டி பிப்ரவரி 11ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், "தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் தோனி பங்கேற்க விரும்பினால், அவரை வரவேற்கத் தயாராக உள்ளோம்" என்றும், "வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவின் ஐ.பி.எல் தொடர்களில் பங்குபெறுவதைப் போல இந்திய வீரர்களும் மற்ற நாடுகளின் உள்நாட்டுத் தொடர்களில் பங்குபெற பி.சி.சி.ஐ அனுமதியளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும் SA20 கமிஷனருமான கிரீம் ஸ்மித்.

இதுபற்றி பேசிய ஸ்மித், "எம்.எஸ்.தோனி தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் நல்ல நண்பர். அவர் இங்கு வந்து விளையாட முடிவு செய்தால் அவரை இரு கரம் நீட்டி வரவேற்போம். நானும் தோனியும் இரண்டு முறை விமான நிலையங்களில் சந்தித்துள்ளோம். தற்போது அவர் ஐபிஎல் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காகச் சிறப்பாகச் செயல்படுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
எங்களின் SA20 தொடரின் மீது அவருக்கு ஆர்வம் இருக்கிறது. இந்தத் தொடர் ஆரம்பிக்கும் முன்பே இது ஒரு பெரிய வெற்றி பெறும் என்று நம்புவதாக அவர் கூறினார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டை ஆற்றல் மிக்க ஒன்றாகப் பார்க்க விரும்புவதாக தோனி என்னிடம் கூறினார்."

மேலும், பி.சி.சி.ஐ பற்றிக் கூறிய அவர், "இந்திய கிரிக்கெட் ரசிகர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்தியாவின் திறமையான வீரர்கள் தங்கள் லீக்கில் விளையாடுவதை அனைவரும் விரும்புவார்கள். ஆனால், பி.சி.சி.ஐ இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. பி.சி.சி.ஐ உடனான எங்கள் உறவு நன்றாக உள்ளது. அவர்கள் மனம் வைத்தால் நாங்கள் எப்பொழுதும் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.