கடந்த ஏப்ரல் 24 ம் தேதி இந்திய கிரிக்கெட்டின் ஜம்பாவனான சச்சின் டெண்டுல்கர் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இது சச்சினுக்கு 50 வது பிறந்தநாள் என்பதால் வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதல் ஸ்பெசலான பிறந்தநாளாகவே இருந்தது. சச்சினுமே தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சிலரை மும்பைக்கே அழைத்து அவர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.

பத்திரிகையாளர்களையும் சந்தித்திருந்தார். வான்கடே மைதானத்தில் மும்பை அணி பஞ்சாபை எதிர்கொண்ட போட்டியின் போது மைதானத்திலேயே கேக் வெட்டி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையிலும் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.
இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவர்களுக்கு சச்சின் நெகிழ்ச்சியாக நன்றி கூறியிருக்கிறார். சச்சின் கூறியிருப்பதாவது, 'களத்தில் வென்ற கோப்பைகளுடன் களத்திற்கு வெளியே உருவாக்கிக் கொண்ட நட்பும்தான் வாழ்வை இன்னும் சிறப்புடையதாக மாற்றுகிறது. உங்களின் பேரன்புமிக்க வாழ்த்துகளை பெற்றதில் நெஞ்சம் நெகிழ்கிறேன். புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் குறுஞ்செய்திகளாகவும் நீங்கள் அனுப்பிய வாழ்த்துகளுக்கு பதிலளிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. அத்தனை பேரின் வாழ்த்துகளுக்கும் நன்றி.
எனக்கு 50 வயதெல்லாம் ஆகவில்லை. 25 வருட அனுபவம் கொண்ட 25 வயது இளைஞன் நான்!' என்றிருக்கிறார்.
ஜாலி மோடில் சச்சின் சொல்லியிருக்கும் இந்த நன்றி இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.