இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் ஐந்து நோ-பால்கள் வீசிய அர்ஷ்தீப் சிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி இப்போட்டிக்கு இளம் வீரர்களை மட்டும் எடுத்துத் தவறு செய்து விட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இளம் வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

இது குறித்துப் பேசிய அவர், "எந்த ஒரு வீரரும் வேண்டுமென்றே இப்படி நோ- பால் வீசமாட்டார்கள். அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்று நன்றாகத் தெரியும். அதனால் தற்போது இளம் வீரர்கள் செய்யும் தவறுகளை எடுத்துச் சொல்லி அவர்களை வழி நடத்த வேண்டுமே தவிர, அவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பது தவறு. ஆரம்பத்தில் இதுபோன்ற தவறுகளைச் செய்தாலும் அதிலிருந்து கற்றுக்கொண்டு அவர்கள் சரி செய்து கொள்வார்கள்.

விமர்சனங்களை அவர்கள் வளரும் விதமாக வைக்க வேண்டும். மனம் உடையும் அளவிற்கு விமர்சனங்களை வைப்பது ஆரோக்கியமானது அல்ல. இளம் வீரர்களுடன் பொறுமையாகச் செயல்பட்டு அவர்களது செயல்பாட்டை வளர்க்க வேண்டும். தற்போது லெஜெண்ட் என பார்க்கப்படும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் ஆரம்பக்கட்டம் சறுக்கலாகவே இருந்திருக்கிறது. அதிலிருந்து கற்றுக் கொண்டுதான் மேலே வந்திருப்பார்கள். ஆகையால் நாம் அதைப் புரிந்து கொண்டு பேசுவது அவர்கள் வளர்ச்சிக்கு உதவும்” என்றார்.