பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான வாசிம் அக்ரம் ’சுல்தான்: எ மெமோயிர்’ (Sultan: A Memoir) என்ற தலைப்பில் சுயசரிதை ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், தன் மனைவியின் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கையில் விசா இல்லாமல் சென்னையில் இறங்க நேர்ந்தது. அப்போது சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் தங்களுக்கு உதவியது குறித்து வாசிம் அக்ரம் உருக்கமாக நினைவுக் கூர்ந்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “ 2009 ஆம் ஆண்டு எனது மனைவியின் சிகிச்சைகாக லாகூரிலிருந்து சிங்கப்பூர் சென்றபோது எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. அப்போது உடல்நிலை மோசமாகி எனது மனைவி சுயநினைவை இழந்தார். எங்களிடம் அந்நேரத்தில் இந்தியாவிற்கான விசாவும் இல்லை.
நான் கண்ணீருடன் இருந்த அந்த தருணத்தில் சென்னை விமான நிலைய அதிகரிககள்தான், `உங்கள் விசா பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்!' என்று கூறினார்கள். "ஒரு மனிதனாக அந்த நாளையும், சென்னையையும் என்றென்றைக்கும் என்னால் மறக்கவே முடியாது" என்று உருக்கமாக வாசிம் அக்ரம் நினைவுக் கூர்ந்துள்ளார்.