உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்று விட்டன. நான்காவது அணிக்கான போட்டியில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது. 9 ஆட்டங்களில் 11 புள்ளிகளை நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. இந்த அணியின் நெட் ரன் ரேட் +0.175 ஆக உள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் 8 ஆட்டங்களில் விளையாடி 9 புள்ளிகளை ஈட்டியுள்ளது. நெட் ரன் ரேட் -0.792 என உள்ளது. இதனால், பாகிஸ்தான் அணியின் அரையிறுதிக் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இன்று நடைபெறும் ஆட்டம் தான் பாகிஸ்தானுக்கு கடைசி ஆட்டம் ஆகும்.

இதில், வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில் வென்றால் நியூசிலாந்து அணியுடன் சேர்ந்து பாகிஸ்தான் அணியும் 11 புள்ளிகள் பெறும். அப்போது, நெட் ரன் ரேட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
350 ரன்கள் எடுத்தால் 311 ரன்களிலும் 400 ரன்கள் எடுத்தால் 316 ரன்களிலும் 450 ரன்கள் எடுத்தால் 321 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற வேண்டும். ஒரு வேளை பாகிஸ்தான் அணிக்கு முதலில் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் தானாகவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடும்.
எனவே, 2019- உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியின் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே நம்பப்படுகிறது. ஏதாவது மிராக்கிள் நடந்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு செல்லும் என்ற நிலையில் `மிராக்கிள் நடக்கும்' எனக் கூறியுள்ளார் அந்த அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது. லார்ட்ஸில் இன்று நடைபெறும் ஆட்டம் குறித்து பேசிய அவர், ``எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். கடைசி போட்டியை அதிகபட்ச லெவலில் வெற்றி பெறுவதற்கு எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். ஆனாலும் யத்தார்த்தமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

அல்லாஹ் உதவி செய்தால் மிராக்கிள் நிகழலாம். நீங்கள் ஒரு பிட்ச்சில் 600, 500 அல்லது 400க்கு மேல் ஸ்கோர் எடுக்கும் போது, மற்ற அணியை 50 ரன்களுக்குள் வெளியேற்ற முடியும் என்று நினைத்தால் அது கடினமான காரியம் தான். இருந்தாலும் அதற்கான முழு முயற்சியை நாங்கள் கொடுப்போம். இந்த ஒட்டுமொத்த தொடரில் 280 - 300 ரன்கள் வரை தான் குவிக்கப்படுகிறது. இங்குள்ள மைதானங்கள் அப்படி தான் இருக்கின்றன. மைதானங்கள் அதிக ரன்கள் குவிக்கும்படி இல்லை. ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்ளவே இந்த மைதானங்கள் ஏற்றபடியாக இல்லை என்பதை குறிப்பிட்ட ஆக வேண்டும். ஆஸ்திரேலியா உடன் தோற்றதே எங்களது இந்த நிலைமைக்கு டர்னிங் பாயிண்டாக அமைந்தது" எனப் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் சொல்லும் மிராக்கிள் நடக்குமா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....கமென்டில் சொல்லுங்க மக்களே...!