ஐபிஎல் போட்டிகளின் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றிருக்க, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிளேஆஃப் செல்லவேண்டும் என்றால் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது. மழை குறுக்கிட்டதால் குறித்த நேரத்தில் போட்டித் தொடங்க முடியாமல் சற்று தாமதமானது.

இருப்பினும் ஆடுகளப் பணியாளர்களின் துரிதமான பணியினால் 8.25 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இப்போட்டி தொடங்கியது. டாஸ் ஜெயித்த குஜராத், முதலில் பௌலிங் செய்யத் தீர்மானம் செய்தது. கடந்த வருடம் பெங்களூர் அணி பிளேஆஃப் செல்ல மும்பை அணி உதவியது போல, இம்முறை மும்பை தகுதிபெற பெங்களூர் உதவுமா, அல்லது அவர்களே வெற்றி பெற்று பிளேஆஃப் போட்டிக்குத் தகுதிபெறுவார்களா என்ற கேள்வியுடன்தான் ஆட்டம் தொடங்கியது.
இந்த சீசனில் வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரர்களாக இருக்கும் பாஃப் டூ ப்ளெஸ்ஸியும், விராட் கோலியும் களமிறங்க முதல் ஓவரை ஷமி வீசினார். ஆட்டத்தின் மூன்றாவது பந்தை கோலி பவுண்டரிக்கு விரட்ட மைதானம் அதிர்ந்தது. இருந்தும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து சிறப்பான தொடக்கத்தைத் தந்தார் ஷமி. ஆனால் அவரின் இரண்டாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி உடன் 4 ஃபோர்களை விளாசினார் டூ ப்ளெஸ்ஸி. அதற்கடுத்த ஓவரில் கோலியும் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச, சிறப்பான தொடக்கத்தை இருவரும் உறுதி செய்து பவர்பிளேயின் முடிவில் 62-0 எனும் வலுவான நிலையை எட்ட உதவினார். அதுமட்டுமில்லாமல் ஒரு சீசனில் 8 அரை சதங்களைக் கடந்த முதல் துவக்க ஜோடி எனும் சாதனையையும் தங்கள் வசமாக்கினார்.

டி20யைப் பொறுத்தவரை 2 நல்ல ஓவர்கள் ஆட்டத்தின் போக்கையே அப்படியே மாற்றிவிடும். அப்படியான இரண்டு ஓவர்களை நூர் அஹமத்தும், ரஷீத் கானும் வீசினர். 8 மற்றும் 9 ஓவர்களை வீசிய அவர்கள், 28 ரன்களில் பாஃப் டூ ப்ளெஸ்ஸியையும், 11 ரன்களில் மேக்ஸ்வெல்லையும் காலி செய்தனர். அடுத்து வந்த லொம்ரோர் வந்த வேகத்தில் நூர் அஹமத் பந்து வீச்சில் வைட் பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். 10 ஓவர் முடிவில் 93-3 என்று காற்று குஜராத் பக்கம் வீச ஆரம்பித்தது. இதற்கடுத்து கோலியுடன் ப்ரேஸ்வெல் ஜோடி சேர்ந்தார். தரையோடு ஆடிய இவர்கள், தவறான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பி பார்ட்னர்ஷிப்பை வளர்த்தனர். 14 ஓவர்கள் முடியும் நேரத்தில் ஷமி பந்து வீச்சில் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார் ப்ரேஸ்வெல்.
அதற்கு அடுத்த ஓவரில் யாஷ் தயால் வீசிய முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் 'கோல்டன் டக்' ஆகி வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றில் 17 முறை 'டக்' அவுட் ஆகி மோசமானதொரு சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார் டிகே. விக்கெட் ஒருபுறம் போய்க் கொண்டு இருந்தாலும் கோலி மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல், தூரிகை கொண்டு ஓவியம் வருவது போல, வேகன் வீல்களில் gap-களில் ஃபோர்களை நிரப்பினார்.

19வது ஓவரின் முதல் பந்தில் தனது 7வது சதத்தினை 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் பூர்த்தி செய்தார். கோலி, இதற்கு முந்தைய போட்டியிலும் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கிறிஸ் கெயிலின் 6 ஐபிஎல் சதங்கள் எனும் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். கோலி மற்றும் அனுஜ் ராவத் ஜோடி விக்கெட் விழாமல் தாக்குப்பிடித்து 20 ஓவர் முடிவில் 197 ரன்களை எட்ட உதவி செய்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இரண்டாவது இன்னிங்ஸை சாஹா மற்றும் கில் தொடங்கினர். முதல் ஓவரை வீசிய சிராஜ், 2 ரன்களை மட்டுமே கொடுத்துச் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார். ஆனால் அடுத்த ஓவரிலேயே பார்னல் 3 பவுண்டரிகளை விட்டுக் கொடுக்க, அவரே அதற்கு நியாயம் செய்யும் வகையில் அடுத்த ஓவரில் சிராஜ் வீசிய பந்தில் ஒற்றைக் கையில் அற்புதமான கேட்சை பிடித்து சஹா 12 (14) அவுட்டாகக் காரணமாக அமைந்தார்.

இதன் பின்னர் விஜய் சங்கர், சுப்மான் கில்லுடன் இணைந்தார். ஒரு பக்கம் பக்காவான கிரிக்கெட்டிங் ஷாட்களில் கில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தால், மறுபுறம் எட்ஜ்-களில் ரன்களை உருவாக்கிக் கொண்டிருந்தார் விஜய் சங்கர். பவர்பிளே முடிவில் 51-1 என்ற சிறப்பான தொடக்கத்தைத் தந்தது இந்த ஜோடி. தொடர்ந்து ஸ்லிப், தேர்ட் மேன் திசையில் பந்துகள் செல்ல அங்கே கேப்டன் டூ ப்ளெஸ்ஸி ஏன் ஃபில்டர்களையே நிறுத்தவில்லை என்பது அவருக்கே வெளிச்சம்.
இதற்குப் பிறகு அவர் பல்வேறு வகையில் பந்து வீச்சினை மாற்றிப் பார்த்தாலும் கில் - விஜய் சங்கர் ஜோடி சீரான இடைவெளிகளில் பவுண்டரிகளை உருவாக்கினர். இதனால் பத்து ஓவர் முடிவில் 90-1 என்ற நிலையை எட்டியது ஸ்கோர்போர்டு. சிறப்பாக விளையாடிய கில் 12வது ஓவரில் தனது ஐந்தாவது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். மேலும் தனது முதல் ஓவரை வீச வந்த ப்ரேஸ்வெல்லை 2 இமாலய சிக்ஸர்களைப் பறக்க விட்டுக் கலங்கடித்தார்.
இதுவரை எட்ஜில் பிழைத்துக் கொண்டிருந்த விஜய் சங்கரும், விஜய்குமார் வைசாக் பந்தில் 2 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து மைதானத்தை மயான அமைதிக்கு இட்டுச் சென்றார். விஜய் சங்கர் 106 மீட்டர் எனும் இமாலய சிக்ஸருக்குப் பின் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், போட்டி ஏற்கெனவே அவர்கள் கையைவிட்டுச் சென்றிருந்தது. கில் - விஜய் ஜோடி மட்டும் 123 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்திருந்தனர். 'அருணாச்சலம்' படத்தில் தந்தை ரஜினி சேர்த்த பணத்தை மகன் ரஜினி வாரி வழங்குவது போல கோலி சேர்த்த ரன்களை RCB பெளலர்கள் வாரி வழங்கினர்.

அடுத்து வந்த ஷனாகா 3 பந்துகளில் அவுட் ஆகி வெளியேறினார். இதற்கடுத்து வந்த மில்லர் முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தொடங்கினார். கடைசி 18 பந்துகளில் 34 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், 18வது ஓவரின் முதல் பந்தினை சிராஜ் வீச, சிக்ஸர் அடித்து RCBயின் கடைசி நம்பிக்கையையும் உடைத்தார் கில். எனினும் மில்லரின் விக்கெட் பறிபோக மைதான அரங்கில் ஆர்ப்பரிப்பு மீண்டும் ஆரம்பமானது. ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்து ஆர்ப்பரிப்பை வந்த வேகத்தில் அமைதியாக்கினார் கில். அடுத்து ஹர்ஷல் படேலின் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து 97 ரன்களை அடைந்தார்.

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பார்னல் வைட், நோ பாலென போட்டு தனக்குத்தானே பிரஷரை ஏற்றிக்கொண்டார். அடுத்த பந்தில் சீக்ஸர் அடித்து ஈசாலா கப் நம்தெவுக்கு இந்த ஆண்டும் முற்றுப்புள்ளி வைத்தார் கில். RCBயின் இந்தத் தோல்வியின் மூலம் மும்பை பிளே-ஆஃப்பிற்குத் தகுதி பெற்றது. ஆக, வரும் செவ்வாய்க்கிழமை சென்னை - குஜராத் முதல் QUALIFIER 1-லும், அடுத்து புதன்கிழமை மும்பை - லக்னோ எலிமினேட்டரிலும் பலப்பரீட்சை செய்ய இருக்கின்றன.
இறுதிப் போட்டிக்கு எந்த இரண்டு அணிகள் தகுதிபெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன? கமென்ட்டில் சொல்லுங்கள்.