சேப்பாக்கத்தில் நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளெம்மிங் பத்திரிகையாளர் சந்திப்பிற்காக வந்திருந்தார். அந்த சந்திப்பில் ஒரு நிருபர் ஃப்ளெம்மிங்கிடம் கேட்ட கேள்வி,
`சென்னை அணியில் காயமடைந்த வீரர்களைப் பற்றிய அப்டேட் கொடுங்களேன்' என்றார். அதற்கு, `காயங்களைப் பற்றியெல்லாம் பேசினால் ஒரு மணி நேரம் ஆகுமே! அவ்வளவு நேரம் உங்களிடம் இருக்கிறதா?' எனக்கூறி ஃப்ளெம்மிங் அந்த அரங்கையே கலகலக்க வைத்திருந்தார். ஃப்ளெம்மிங் நகைச்சுவையாகப் பேசியிருந்தாலும் இந்த சீசனில் நாம் நிறைய வீரர்கள் காயமடைந்து வருவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் இதுவரை காயமடைந்திருக்கும் வீரர்களின் பட்டியல் இங்கே.

சென்னை சூப்பர் கிங்ஸ்:
சீசன் தொடங்குவதற்கு முன்பே காயமடைந்த வீரரைப் பற்றிய செய்தியோடுதான் சிஎஸ்கே அணி பயிற்சியையே தொடங்கியிருந்தது. கடந்த சீசனில் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக ஸ்பார்க் காட்டி கவனம் ஈர்த்த முகேஷ் சௌத்ரி இந்த முறை பயிற்சியின் போதே காயமடைந்து தொடரிலிருந்தே வெளியேறியிருந்தார். அதேபோல நியூசிலாந்தைச் சேர்ந்த கைல் ஜேமிசனும் சீசன் தொடங்குவதற்கு முன்பே காயம் காரணமாகத் தொடரிலிருந்து வெளியேறியிருந்தார். போட்டிகள் தொடங்கிய பிறகுமேகூட சென்னை அணியில் காயங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. சில போட்டிகளுக்குப் பந்துவீசமாட்டேன் என்ற கட்டுப்பாடோடே அணிக்குள் வந்த பென் ஸ்டோக்ஸ் லக்னோவிற்கு எதிராக ஒரு ஓவரை வீசினார். அதன்பிறகு அவரும் காயம் காரணமாக பென்ச்சில்தான் இருக்கிறார். இன்னும் சில போட்டிகளுக்குக் களமிறங்கமாட்டார் என்றும் தெரிகிறது.
இடையில் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வெடுத்த மொயீன் அலி மீண்டும் வந்துவிட்டார். அதேநேரத்தில் தசைப்பிடிப்பின் காரணமாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இடையிலேயே வெளியேறியிருந்த தீபக் சஹாரின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை. ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த மகாலாவும் விரலில் காயம் என பென்ச்சுக்கு சென்றுவிட்டார்.
எல்லாவற்றுக்கும் உச்சமாக தோனியே தாங்கி தாங்கி நடந்து சென்ற வீடியோ வெளியாகி பகீர் கிளப்பியது. இப்போது புரிகிறதா ஃப்ளெம்மிங் பிரஸ் மீட்டில் அப்படி ஒரு ஜோக்கை ஏன் அடித்தாரென்று?
மும்பை இந்தியன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னையை போலவே பேரதிர்ச்சியுடன்தான் சீசனைத் தொடங்கியது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா இந்த ஐ.பி.எல் தொடரில் ஆடமாட்டார் எனும் செய்தி இடியாய் விழுந்தது. ஜை ரிச்சர்ட்சனும் காயம் காரணமாக ஆடவில்லை. ஜோஃப்ரா ஆர்ச்சரும் ஃபிட்னஸ் விஷயத்தில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறார். திடீரென அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் வயிற்றுவலி எனக்கூறி இம்பாக்ட் ப்ளேயராக பேட்டிங் மட்டும் ஆட வருகிறார். மும்பை அணியும் இந்த காயமடைந்த வீரர்களால் அனுபவமற்ற வீரர்களை இறக்கி கொஞ்சம் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ்:
சீசன் தொடங்கிய பிறகு காயம் சார்ந்த செய்திகளை முதலில் வெளியிட தொடங்கியது குஜராத் அணிதான். முதல் போட்டியிலேயே ஒரு பெரிய கேட்ச்சை பிடிக்க முயன்று கீழே விழுந்து காலில் பலத்த அடியை வாங்கினார் கேன் வில்லியம்சன். பாவம், அந்த அடியால் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் உலகக்கோப்பைத் தொடரிலேயே வில்லியம்சனால் ஆட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இடையில் ஒரு போட்டியில் ரஷீத்தை கேப்டனாக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவும் ஓய்வெடுக்க சென்று பீதியை கிளப்பினார். ஆனால், உடனே அடுத்தப் போட்டியிலேயே மீண்டும் வந்துவிட்டார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
இங்கிலாந்து அணியின் முக்கியமான இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ரீஸ் டாப்ளே முதல் ஒன்றிரண்டு போட்டிகளிலேயே தோள்ப்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் தொடரிலிருந்தே விலகிவிட்டார். இங்கிலாந்து அணி இவரை உலகக்கோப்பைக்காகத் தயார்ப்படுத்தி தேற்றி வந்தது. ஆனால், அந்த டி20 உலகக்கோப்பையிலும் காயமாகி டாப்ளே தொடரிலிருந்து வெளியேறினார் என்பது வேறு கதை. ரஜத் பட்டிதர், வில் ஜாக்ஸ் போன்ற வீரர்களையும் பெங்களூர் அணி காயத்தால் இழந்திருக்கிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்:
அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டே விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் ஆடாமல் வெளியில்தான் இருக்கிறார். அது ஏற்கனேவே தெரிந்த செய்தி. இடையில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அஹமது தசைப்பிடிப்பினால் பாதிக்கப்பட்டு பென்ச்சில் இருந்தார். அவர் இன்னும் மீண்டு வந்ததாக தெரியவில்லை.
பஞ்சாப் கிங்ஸ்:
தங்களுடைய அதிரடி பேட்டர்களில் ஒருவரான ஜானி பேர்ஸ்ட்டோவை பஞ்சாப் அணி தொடர் தொடங்கும் முன்பே இழந்திருந்தது. தொடரில் பஞ்சாப் அணி ஓரளவுக்கு சிறப்பாக ஆட மிக முக்கிய காரணமாக இருந்த கேப்டன் தவானுமே தோள்ப்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வெடுத்துவிட்டு சாம் கரனை கேப்டனாக்கிவிட்டார். தவான் விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே ப்ரீத்தி ஜிந்தாவின் பிரார்த்தனையாக இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
டெல்லியின் கதைதான் கொல்கத்தாவுக்கும். ரிஷப் பண்டை போல ஸ்ரேயாஸ் ஐயருக்குமே காயம்தான். அதனால் தொடக்கத்திலேயே தொடரிலிருந்து விலகிவிட்டார். நிதிஷ் ராணா புதிய கேப்டனாக்கப்பட்டார். இந்நிலையில், பெர்ஃபார்மே செய்யாவிட்டாலும் அணியின் முக்கிய வீரராக இருக்கும் ரஸலும் காயமுற்றிருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு சன்ரைசர்ஸூக்கு எதிராக பந்துவீச வந்தவர் காயம் காரணமாக பென்ச்சுக்கு சென்று பயமுறுத்தினார். ஆனால், மும்பைக்கு எதிரான அடுத்தப் போட்டியிலேயே களமிறங்கி அசத்தியிருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:
அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான பிரஷித் கிருஷ்ணா காயம் காரணமாக முன்னதாகவே தொடரிலிருந்து விலகிவிட்டார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
லக்னோ அணியில் கடந்த சீசனில் கவனம் ஈர்த்த மோஷின் கான் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே லீவ் லெட்டர் கொடுத்துவிட்டார். இப்போது மயங்க் யாதவ் எனும் வீரரும் காயமுற்று தொடரை விட்டு வெளியேறியிருக்கிறார். அவருக்குப் பதிலாக ஆர்பிட் குலேரியா என்பவரை மாற்று வீரராக லக்னோ ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறது.