நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சொந்த மண்ணில் சிஎஸ்கே ஆடும் போட்டியில் மறக்கமுடியாத வரவேற்பை ரசிகர்கள் தர பதிலுக்கு நினைவில் கொள்ளத்தக்க வெற்றியை தோனியின் படையும் பரிசளித்திருக்கிறது.
குஜராத்துடனான தோல்வியிலிருந்து அதிவேகமாக மீண்டெழும் அவசரத்தில் சேப்பாக்கத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கே படை கால்பதித்தது. லக்னோவின் வலிமை தாங்கிய பேட்டிங் பலத்தைவிட தங்களது பௌலிங் பலவீனம் தான் சிஎஸ்கேவை சற்று கூடுதலாக பயமுறுத்தியது. அதோடு பேட்ஸ்மேனுக்கு துணைநிற்கும் சேப்பாக்கத்தின் இயல்பு குறித்த அச்சமும் இணைய 200-க்கும் அதிகமான ரன்களை எடுத்தே ஆக வேண்டுமென்ற முனைப்பு ஓப்பனர்களின் ஒவ்வொரு அசைவிலும் தென்பட்டது.

கான்வேயும் சளைத்தவரல்ல. மறுமுனையில் பந்துகளை வீணாக்காமல் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் ரன்கள் வந்துகொண்டே இருப்பதை உறுதிசெய்து பளு மொத்தமாக கெய்க்வாட்டின் பக்கம் ஏறாமல் அவர் பார்த்துக் கொண்டார். இந்த இரு ஆளுமைகளும் ஒத்திசைவு செய்ததில், செறிவூட்டப்பட்ட ரன்ரேட் சாத்தியமானது.
சேப்பாக்கம் களத்தில் தனது சிறந்த பவர்பிளே ரன்களையும் (79), ஒட்டுமொத்தமாக தனது மூன்றாவது சிறந்த பவர்பிளே ரன்களையும் சிஎஸ்கே பதிவு செய்தது. இதில் கெய்க்வாட்டின் பங்கு மட்டுமே 20 பந்துகளில் 46 ரன்கள்.

கெய்க்வாட் - கான்வே அமைத்த ராஜபாட்டையில்தான் சிஎஸ்கே பயணித்தது என்றாலும் அப்பாதையை விரிவுபடுத்திய பெருமை ராகுலின் கேப்டன்ஷியையே சாரும். அவர்களுக்கு எந்தவித சவாலை தரவும் ராகுல் முயலவே இல்லை. கடந்த போட்டியின் ஆட்டநாயகனான மார்க் உட்டின் வேகத்தால் இரண்டாவது ஓவரிலேயே அவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கலாம். இல்லையெனில் சுழல் களம் என்பதை சிந்தித்து தங்களது பிரதான பௌலரான பிஷ்னாயை முன்கூட்டி இறக்கி அவர்களை திணறடித்திருக்கலாம்.
இது இரண்டையுமே அவர் செய்யவில்லை. ஆற அமர அவர்கள் செட்டில் ஆவதற்கான அவகாசத்தைக் கொடுத்து விட்டார். மயிலிறகால் வருடுவதுபோல பகுதிநேர ஸ்பின்னர்களான க்ருணால் பாண்டியாவையும், கௌதமையும் பவர்பிளேவுக்குள் வீசவைத்திருந்தார்.
ஸ்பின் பந்துகளை அப்படியே சாப்பிடும் கெய்க்வாட்டிற்கோ ஆஃப் ஸ்பின் பந்துகள் பெரிய அச்சுறுத்தலாகவே இல்லை. கௌதமின் ஓவரை மூன்று சிக்ஸர்களாலேயே சிறப்பித்தார். க்ருணாலின் ஃப்ளாட் டெலிவரிகளாலும் எதுவும் நிகழவில்லை.
ஓரளவு லக்னோ தப்பிப்பிழைத்தது யாஷ் தாக்கூரின் ஓவர்களில்தான். உனத்கட்டுக்கு பதிலாக சேர்க்கப்பட்டிருந்த அவர் அறிமுகப் போட்டியிலேயே சிறப்பாகப் பந்துவீசினார். இணைக்கப்பட்ட நூலைக் கொண்டு பட்டத்தைக் கட்டுப்படுத்துவது போல தனது லைன் மற்றும் லெந்தினை சரிசெய்து பந்தினை தனது விருப்பத்திற்கு பயணிக்கச் செய்து ரன் கசிவை மட்டுப்படுத்தினார். ஆனாலும்கூட விக்கெட் விழவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் புதுமுக வீரருக்குக்கூட ஏழாவது மற்றும் ஒன்பதாவது ஓவர்கள் கிடைத்திருக்க சுழலுக்கு சாதகமான களத்தில் கேம் சேஞ்சர் ஆக பரிமளிக்கும் பிஷ்னாயோ 10-வது ஓவரில்தான் இறக்கப்பட்டார்.

வீசிய முதல் பந்திலேயே அவரது ஃப்ளைட்டெட் டெலிவரி கெய்க்வாட்டை 57 ரன்களோடு வெளியேற்றியதோடு ராகுல் முதல் பாதியில் எங்கே தடுமாறினார் என்பதையும் விளக்கியது. மத்திய ஓவர்களை கவனிக்கும் நோக்கோடு ப்ரமோட் செய்யப்பட்டிருந்த ஷிவம் துபேயையும் பிஷ்னாயின் Wrong-un தான் காலி செய்தது. அவரது ஷார்ட் பால் குறைபாட்டால் மார்க் உட் மூலம் அவருக்கான பொறி தயாராகும் என நினைத்தால் பிஷ்னாயே சகலத்தையும் முடித்தார். அவரது பந்துகளை பேக் டு பேக் சிக்ஸர்களாக்கி அதிரடி மோடுக்கு மாறத் தொடங்கியிருந்த துபேயை மட்டுமல்ல அவிஷ் கானின் ஓவரை ஹாட்ரிக் பவுண்டரிகளால் கவனித்த மொயின் அலியையும் வீழ்த்தினார். மத்திய ஓவர்களில் ஓரளவு ரன் வறட்சி ஏற்பட அவர்தான் காரணம்.
சிஎஸ்கேயின் பக்கமோ 200-ஐ தாண்ட வேண்டுமென்ற துடிப்பு எல்லோரிடமுமே அதிகமாகப் பிரதிபலித்தது. முதல் பந்திலிருந்தே அம்பதி ராயுடுவிடம் ததும்பிய அடித்துத் துவைக்கும் மனப்பான்மையும் இதன் விளைவே. இறுதியாக இறங்கிய தோனியோ மொத்த இன்னிங்க்ஸுக்குமான உச்சகட்டத்தை இறுதி ஓவரில் கொணர்ந்தார்.
அசந்தால் முட்டிச்சாய்க்கும் மார்க் உட்டின் பந்துகளை பேக் டு பேக் சிக்ஸர்களாக்கினார். தேர்ட் மேனின் பக்கம் தலைதெறிக்க முதல்முறை பறந்த பந்தை இரண்டாவது முறை ஷார்ட்டாக மார்க் உட் வீச, அது தோனியால் தண்டனைக்கு உள்ளாகி தரை இறங்காமல் டீப் ஸ்கொயர் லெக்கை பறந்தே எட்டியது. அதற்கடுத்த பந்தில் மார்க் உட் தோனியின் விக்கெட்டை வீழ்த்தியிருப்பினும் இந்த இருசிக்ஸர்களே அக்கட்டத்தில் அணிக்கும் அவரது ரசிகர்களுக்கும் போதுமானதாக இருந்தது. சென்ற போட்டியிலேயே சிக்ஸர் தரிசனம் கிடைத்திருந்தாலும் சேப்பாக்கத்தில் அது இரட்டையாய்க் கிடைத்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியதோடு அணியின் ஸ்கோரை 217-ல் போய் நிறுத்தியது. பிஷ்னாய் மற்றும் மார்க் உட்டின் ஆறு விக்கெட்டுகளை நீக்கினால் அணி எப்படிப்பட்ட ஒரு சரிவினை சந்தித்திருக்கும் என்பதுவும் தெளிவாகும்.
218 என்ற கடினமான இலக்கத்தை நிர்ணயித்த போதும் சிஎஸ்கேயால் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியவில்லை. `ஹை ஸ்கோரிங் த்ரில்லராக இருக்கும்' என அஷ்வின் முன்கூட்டி அனுமானித்தது போன்றே பல இடங்களில் சிஎஸ்கேக்கு சோதனைகள் காத்திருந்தன. அதன் அடித்தளம் மேயர்ஸால் வலுவாக இடப்பட்டது.

டீ காக் வரும்வரை தற்காலிகமாக தரப்பட்ட ஓப்பனர் ஸ்லாட்டிலிருந்து நீக்கமுடியாத புள்ளி நோக்கி மேயர்ஸ் பயணித்துக் கொண்டிருக்கிறார். பொல்லார்ட், கெய்ல், பிராவோ என மேற்கிந்தியத் தீவு வீரர்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த அதே தாக்கத்தையும் அச்சுறுத்தலையும் இவரது பேட் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஒருபக்கம் நின்று ராகுல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க மறுபுறமோ இடைவிடா தோட்டாக்கள் முன்னேறி தோள் கிழிக்கும் உணர்வை சிஎஸ்கே பௌலர்களுக்கும் ஃபீல்டர்களுக்கும் மேயர்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். டீ காக்கே திரும்ப வந்தாலும் அவரோடு சேர்ந்து இவரும் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பினையே லக்னோ இனிமேல் உருவாக்கும். 5.3 ஓவர்களில் 79 ரன்களை அணி எட்டியிருந்த போது 53 ரன்களோடு வெளியேறிய அவரது ஸ்ட்ரைக்ரேட் அசாத்தியமாக 240.9.
சிஎஸ்கே பேட்டிங்கில் நடந்தது போலவேதான் இங்கேயும் தொடர்ந்தது. புதுப்பந்தில் விக்கெட் எடுத்துத் தரவேண்டிய தீபக் சஹாரின் பந்துவீச்சில் பழைய அச்சுறுத்தல் இல்லை. பவர்பிளேவுக்குள் வீசிய மூன்று ஓவர்களில் 37 ரன்களை வாரிக்கொடுத்திருந்தார். போதாக்குறைக்கு பந்துவீச மாட்டாரா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ், இம்பேக்ட் ப்ளேயராக இறங்கி கடந்தமுறை இடியை சிஎஸ்கேவின் பக்கம் இறக்கிய துஷர் தேஸ்பாண்டே இருவருமே வீசிய ஒரே ஓவரில் 18 ரன்களைக் கொடுத்திருந்தனர். மொத்த மைதானமும் அமைதி ஊடுருவ மேயர்ஸ் பௌலர்களை வதம் செய்த விதத்தை மட்டுமே கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தது.

சுதாரித்துக் கொண்ட தோனி, 6-வது ஓவரில் இருந்து மொயின் அலியையும் சாண்ட்னரையும் இருமுனைகளில் இருந்தும் வீசவைத்து அழுத்தமேற்றினார். ராகுல் தனது சிறந்த ஸ்பின்னரை 10-வது ஓவரில் இறக்கிய இடத்தில்தான் ஆட்டத்தைக் கோட்டைவிட்டார். இந்த நான்கு ஓவர்கள் வித்தியாசம்தான் சிஎஸ்கேவுக்கான பிரேக் த்ரூ.
மேயர்ஸையும் ராகுலையும் மொயின் வெளியேற்ற சாண்ட்னர் ஹூடாவினை ஆட்டமிழக்க வைத்தார். இந்த மூன்று விக்கெட்டுகளும்தான் போட்டி சிஎஸ்கேவின் பக்கம் யூ டர்ன் போட்ட தருணம். அப்புள்ளியிலிருந்து பார்ட்னர்ஷிப்கள் உருவாக உருவாக சிஎஸ்கே உடைத்தாலும் மேயர்ஸ் எடுத்து வைத்திருந்த கூடுதல் ரன்கள் புதிதாக களமிறங்கும் வீரர்கள் இளைப்பாறுவதற்கான வாய்ப்பினை கால அவகாசமாக அளித்தது.
உண்மையில் 200-ஐ கடந்ததற்கு மேயர்ஸோடு சிஎஸ்கேயின் மோசமான பௌலிங்குமே மிகமுக்கிய காரணம். ஜடேஜா, ஸ்டோக்ஸ், ஹங்க்ரேக்கர் என யாருமே சிறப்பாக பங்களிக்காததால் ஒரு கட்டத்தில் லக்னோவுக்கு தேவைப்படும் ரன்களுக்கும் பந்துகளுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. டெத்ஓவர்களில் கடந்த சீசனில் பல போட்டிகளில் அணி கடந்த அதே அபாயகரமான கட்டம்தான். இருப்பினும் தோனி இருக்கும் பௌலர்களை திறம்பட பயன்படுத்தியதும், துஷாரின் இரு விக்கெட்டுகளும் இறுதியில் அணியைக் கரைசேர்த்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைக்க வைத்தது.
இருப்பினும் 18 ரன்கள் உதிரியாகக் கொடுக்கப்படாமல் விட்டிருந்தால், இது இன்னமும் பெரிய வித்தியாசத்திலான வெற்றியாக பதிவேற்றப்பட்டிருக்கும். குறிப்பாக துஷர், ஹங்க்ரேக்கர் மற்றும் தீபக் சஹாரிடமிருந்து டெத்ஓவர்களில் வொய்டுகளும், நோ பால்களுமாக எக்ஸ்ட்ராக்கள் வரிசைகட்டி வந்து சேர்ந்தன. ஏற்கனவே பலவீனமாக உள்ள பௌலிங்கில் இத்தகைய உதிரிகள் எதிரிகளாக துருவேற்றுகின்றன. இது தொடர்ந்தால் அது அணிக்கு பெரிய பாதிப்பாக உருவெடுக்கும். தோனியே ஓவர்ரேட் விதியினையும் மனதில் வைத்து இது மாறாவிடில் புதிய கேப்டனை அவர்கள் தேட வேண்டியதிருக்கும் என மறைமுகமாக தனது பௌலர்களை சாடியிருந்தார்.

லக்னோவுடையது நல்ல பேட்டிங் லைனாக தெரிந்தாலும் குறைகளும் இல்லாமல் இல்லை. மேயர்ஸ் தந்த தொடக்கத்தை மற்றவர்கள் அப்படியே கொண்டு செல்லத் தவறினர். அதிலும். ஸ்டோய்னிஸ், பதோனி உள்ளிட்டவர்கள் மெதுவாக ரன்களை சேர்த்ததும் லக்னோவுக்கு பாதிப்பாக விடிந்தது.
சிஎஸ்கேவுக்கு இது முதல் வெற்றி என அகமகிழ்ந்து கொண்டாட முடியாத அளவு மொயின் அலி மற்றும் சாண்ட்னர் தவிர்த்த மற்றவர்களின் எக்கானமி ரெட்அலர்ட் தருகிறது. வரும் போட்டிகளில் அவர்களது முதல் கவனம் இதை நோக்கியே இருக்க வேண்டும்.