இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது. முதல் போட்டியில் மிக சிறப்பான வெற்றியை பெற்ற இந்தியா அதே வேகத்தில் இரண்டாவது போட்டியையும் வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

2006-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு பைலேட்ரல் தொடரையும் கைப்பற்றியதில்லை மேற்கிந்திய தீவுகள் அணி. ஆனால், நேற்று இந்திய அணி தன் பேட்டிங்கை முடித்திருந்தபோது இப்போட்டியை எப்படியேனும் வென்று தொடரை சமன் செய்துவிடலாம் என்று மேற்கிந்திய பேட்டார்கள் நிச்சயம் நினைத்திருப்பர். காரணம், முதல் போட்டியை போல அல்லாமல் மிக சிறப்பான ஒரு பௌலிங்கை வெளிப்படுத்தி இருந்தனர் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள். முந்தைய ஆட்டத்தில் ஸ்பின்னர்களுக்குக் கிடைத்த டர்ன் இப்போட்டியில் சீம் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவவே, அதை முழுமையாக பயன்படுத்தி இந்திய அணியை 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 237 ரன்களில் கட்டுப்படுத்தி இருந்தனர்.
இப்போட்டியில் கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்குத் திரும்பியதால் இஷான் கிஷன் வெளியே உட்கார வைக்கப்பட்டார். ஆனால் ராகுலை மிடில் ஆர்டரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அணி நிர்வாகம் ஒரு முடிவோடு இருந்ததால் ஓப்பனிங்கிற்கான மற்றுமொரு ஸ்லாட் காலியாக இருந்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில் அவ்விடத்தில் ரோஹித்துடன் களமிறங்கினார் ரிஷப் பண்ட். ஆனால் அது இந்திய பேட்டிங்கிற்கு எந்த வகையிலும் உதவிடவில்லை. நான்காவது ஓவரில் ரோஹித் விக்கெட் போனதிலிருந்தே இன்னிங்ஸை தங்கள் கட்டுப்பாட்டை மீறி போகாமல் பார்த்து கொண்டனர் எதிரணி பௌலர்கள்.

பண்ட், கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ராகுல் மற்றும் சூர்யகுமாரின் உதவியோடு மிடில் ஓவர்களைக் கடந்தது இந்தியா. ஆனால் சீரிய இடைவெளியில் ஒவ்வொரு விக்கெட்டுகளாக விழுந்ததை தொடர்ந்து இறுதியில் தேவைக்கும் குறைவான ஸ்கோரையே இந்திய பேட்டார்களால் எடுக்க முடிந்தது.
இதனால் இரண்டாவது இன்னிங்ஸை ஒரு பெரிய நம்பிக்கைவுடனேயே தொடங்கினர் மேற்கிந்திய அணியின் பேட்டர்கள். ஆனால், அதை ஒற்றை ஆளாய் தகர்த்தெறிந்தார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ப்ரசீத் கிருஷ்ணா. நேற்று அவர் வெளிப்படுத்திய பௌலிங் அப்படி. மொத்தம் 9 ஓவர்களை வீசி வெறும் 12 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இந்திய வெற்றிக்கு மிக முக்கிய பங்கு வகித்தார். முதல் இன்னிங்ஸில் எதிரணி பௌலர்கள் வீசிய லைன் மற்றும் லெந்த்தை அவரும் கடைபிடிக்கவே, அதற்கான முழுமையாக பலனும் கிடைத்தது. தன் முதல் ஸ்பெல்லில் 4 ஓவர்களை வீசிய ப்ரசீத் அதில் இரண்டை மெய்டனாக்கி 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்திருந்தார். கூடுதலாக தன் 7 பந்துகளிலேயே ப்ராண்டான் கிங் மற்றும் டேரன் ப்ராவோவின் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். காரணம் லைன் மற்றும் லெந்தில் அவர் காட்டிய அத்தனை துல்லியம்.

தன் பெரும்பாலான பந்துகளை ஷார்ட் ஆப் லெந்தாக மட்டுமே வீசிய அவர் தேவையில்லாமல் ஃபுல் லெந்த் பந்துகளை வீசவே இல்லை. அவர் ஓவர்களில் ரன்களே வராதது மேற்கிந்திய பேட்டர்களுக்கு கூடுதல் ஃபிரஷரை ஏற்படுத்தியது. ப்ரசீத் வீழ்த்திய பூரனின் விக்கெட்டும் பேக் ஆப் லெந்த் டெலிவரிதான். இங்கு கூடுதலாக கேப்டன் ரோஹித்தின் வியூகமும் இந்திய அணிக்கு உதவியது. களத்திற்கு வந்த உடனேயே அதிரடி காட்டிய பூரனின் விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்த வேண்டும் என்று தாக்கூரின் ஸ்பெல்லை ஒரே ஓவரோடு முடித்து ப்ரசீத்தை அழைத்தார் ரோஹித். கூடுதலாக அவர் ஸ்லிப்பில் நின்று கொள்ள அவரிடமே கேட்ச் ஆகி வெளியேறினார் பூரன்.
நேற்றை ஆட்டம் முழுவதுமே ஸ்லிப் பொஷிஷனை பயன்படுத்த கேப்டன் ரோஹித் எந்த இடத்திலும் தயங்கவில்லை. கடைசி கட்டத்தில் ஓடென் ஸ்மித் அதிரடி காட்டி கொண்டிருக்கும்போது கூட ஸ்லிப்பில் நின்றார் ரோஹித். கடைசி விக்கெட்டாக கெமர் ரோச்சை ப்ரசீத் lbw செய்யவே 193 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது மேற்கிந்திய தீவுகள். ஆட்டநாயகனாக அவரே தேர்வு செய்யப்பட்டார்.