இந்த ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பையை வெல்வதற்காகப் பல சர்வதேச அணிகள் முழுமூச்சுடன் தயாராகி வருகின்றன. இதுவரை இந்தியாவில் 1987, 1996, மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று இருக்கிறது. அதில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

அதன் பிறகு நடத்த எந்தவொரு ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைப் போட்டியிலும் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றவில்லை. இதனால் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்கும் இந்த உலகக்கோப்பையை வென்றுவிட வேண்டும் என்று இந்திய அணி முனைப்புக் காட்டி வருகிறது.
இந்நிலையில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகக்கோப்பைப் போட்டிகளுக்காக பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்ஷாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை போன்ற 12 இடங்களைப் பட்டியலிட்டு இருக்கிறது என்றும், இறுதிப்போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 46 நாள்களில் 48 போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி மற்றும் பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகிறது. அடுத்து ஐபிஎல் போட்டிகளும் சென்னையில் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து உலகக்கோப்பை போட்டிகளுக்கான மைதானங்களில் சென்னையின் பெயரும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் குறைந்தது 4, 5 லீக் போட்டிகளாவது நடக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.