இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைத் தக்க வைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வினும், ஜடேஜாவும் கூட ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

இந்நிலையில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ பெரும்பாலும் இந்தியாவில் விளையாடும் எதிரணியினர் சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜாவை போல பந்துவீச முயற்சிப்பார்கள். இந்தியாவில் எப்படி பந்து வீச வேண்டும் என்று அவர்கள் இருவருக்கும் நன்றாகவே தெரியும்.
அஷ்வின் ஒரு சிறந்த பவுலர். என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அவர் ஆஸ்திரேலியாவிற்கு வந்து விளையாடியபோதும் அபாரமாக பந்து வீசி இருந்தார். ஜடேஜாவை பொறுத்தவரை தனது பவுலிங் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த இரண்டு (பார்டர்-கவாஸ்கர்) போட்டிகளிலும் கூட இருவரும் அதிக விக்கெட்டுகளை எடுத்து இருந்தனர். களத்தில் அவர்கள் மேற்கொள்ளும் சில விஷயங்களை உங்களால் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். அதனால் அஷ்வின் ஜடேஜாவை போல பந்துவீச வேண்டும் என்று நினைக்காதீர்கள். உதாரணத்திற்கு நாதன் லயன், அஷ்வின் ஆக முடியாது. அதனால் அவர் அஷ்வினை போல முயற்சிக்காமல் அவருடைய ஸ்டைலிலேயே பந்துவீச வேண்டும்” என இயன் சேப்பல் கூறியுள்ளார்.