கடந்த 9 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 13-வது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
அந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அந்த ஓவரை யாஷ் தயாள் வீசினார். யார் இந்த ஓவரை வீசினாலும் 29 ரன்கள் அடிப்பது கடினம் என்று பேசப்பட்ட நிலையில் அந்த பரபரப்பான போட்டியில் ரிங்கு சிங் கடைசி ஐந்து பந்துகளில் 5 சிக்சர்களை அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

20 வது ஓவரில் 31 ரன்களை விட்டுக் கொடுத்த யாஷ் தயாளை அடுத்தடுத்த போட்டிகளுக்கு கொல்கத்தா அணி எடுக்கவில்லை. இதனால் கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு பல போட்டிகளில் வெற்றியைப் பெற்று கொடுத்த யாஷ் தயாளை ஏன் அடுத்தடுத்த போட்டிகளில் களமிறக்காமல் இருக்கிறீர்கள் என்று பலரும் கேள்விகளை எழுப்பி விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் யாஷ் தயாள் குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்."யாஷ் தயாளை பொறுத்தவரை அவர் எங்கள் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்தான். ஆனால் அவரது உடல்நிலை தற்போது மோசமாக இருக்கிறது. வைரஸ் தொற்று மற்றும் அந்த போட்டிக்குப் பிறகான அழுத்தத்தால் கிட்டத்தட்ட 7 முதல் 8 கிலோ வரை அவருக்கு உடல் எடை குறைந்து இருக்கிறது.

இதனால் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த சூழலில் அவரை எப்படி விளையாட வைக்க முடியும். 31 ரன்களை விட்டுக் கொடுத்ததற்காக வெளியில் அவர் அமர்த்தப்படவில்லை. உடல்நிலை பிரச்சனையால் அவர் களத்தில் வந்து விளையாட சில நாட்கள் ஆகலாம்" என்று கூறியிருக்கிறார்.