தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மற்றும் முதலமைச்சர் கோப்பை போட்டிகளின் தொடக்க விழா மற்றும் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.

முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான இலச்சினையாக நீலகிரி வரையாடை கொண்ட வடிவமைப்பு வெளியிடப்பட்டது. அதற்கு 'வீரன்' என்று பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது. விழாவில் பங்கேற்றிருந்த சிறப்பு விருந்தினரான தோனிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப்பரிசை வழங்கினார்.
உதயநிதி பேசுகையில், "முதல்வர் ஸ்டாலின் மற்றும் தோனி இருவரும் தங்களது சொந்த உழைப்பால் கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள்" என தோனியையும் முதல்வரையும் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

விழாவில் தலைமையுரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின் தோனி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.
"சென்னையின் செல்லப்பிள்ளை தோனி. தமிழர்கள் ஒவ்வொருவரை போலவும் நானும் ஒரு தோனி ரசிகன்தான். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டிகளைக் காண தோனிக்காகவே சென்றேன்.

தமிழ்நாட்டின் தத்துப்பிளையான தோனி, தொடர்ந்து சென்னை அணிக்காக ஆடுவார் என நம்புகிறேன். தோனி எளிமையான பின்னணியைக் கொண்டு கடினமான உழைப்பினால் முன்னேறியவர்.

அப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் விளம்பரத்தூதராக நியமிப்பதில் பெருமைக் கொள்கிறோம்" என தோனி குறித்து பெருமிதமாகப் பேசி முடித்தார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் கோப்பைப் போட்டிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான ஜெர்சியும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை தோனி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து வெளியிட்டிருந்தனர்.