மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் நேற்று நடைபெற்றிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் ஐ.பி.எல் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இதற்காக அர்ஜுன் டெண்டுல்கருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தையான சச்சின் டெண்டுல்கர் தனக்கு வழங்கிய சில அறிவுரைகள் குறித்துப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அர்ஜுன் டெண்டுல்கர், "ஐ.பி.எல்-இல் முதல் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியினர் வகுத்த திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது என்பதில்தான் என்னுடைய முழுக் கவனமும் இருந்தது. எனக்குப் பந்துவீச்சு மிகவும் பிடித்திருக்கிறது. எனது அணி நிர்வாகம் என்ன திட்டம் வகுக்கிறார்களோ அதனைச் சிறப்பாகச் செய்ய நான் முயற்சி செய்கிறேன்.
நானும் அப்பாவும் கிரிக்கெட் பற்றி நிறையப் பேசுவோம். ஒரு போட்டியில் கலந்துகொண்டு விளையாடுவதற்கு முன்பு எப்படிச் செயல்பட வேண்டும் என்பது போன்ற யுக்திகள் குறித்து விவாதிப்போம். பயிற்சியில் ஈடுபடும்பொழுது என்ன செய்கிறாயோ அதனையே நீ பங்கேற்கும் போட்டிகளிலும் செயல்படுத்து என்று அப்பா என்னிடம் கூறுவார்" என்று அர்ஜுன் டெண்டுல்கர் தெரிவித்திருக்கிறார்.