2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் ஷர்மா, 3வது பந்தில் களத்தில் உறுதியாக நின்றிருந்த மிஸ்பாவின் விக்கெட்டை எடுத்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
2011-ல் கார் விபத்தில் சிக்கிய இவர் சிறிது காலம் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதன் பின் ஒரு சில கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கலந்துகொண்டார். இருந்தபோதும் 39 வயதான ஜோகிந்தர் ஷர்மா 2002 முதல் 2017 வரை ஹரியானா அணிக்காகப் பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜோகிந்தர் ஷர்மா அறிவித்துள்ளார். இது தொடர்பாக பி.சி.சி.ஐ-க்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
அதில், "அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். 2002 முதல் 2017 வரையிலான எனது கிரிக்கெட் பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. எனக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கொடுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஹரியானா கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹரியானா அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நான் சரியாக விளையாடாமல் பின்னடைவைச் சந்தித்தபோது பலரும் எனக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். அவர்கள் என்றும் என் நினைவில் இருப்பார்கள். என்னுடன் விளையாடிய சக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி உதவியாளர்கள் இவர்கள் இல்லாமல் எனது பயணம் சாத்தியமில்லை. இவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகிந்தர் சர்மா, தற்போது ஹரியானா மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.