இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய 1996 உலகக்கோப்பை, பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை நடந்தது. இலங்கையில் 4 லீக் போட்டிகள் நடப்பதாக இருந்தது. போட்டி தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன், ஜனவரி 31-ம் தேதி கொழும்பிலுள்ள சென்ட்ரல் வங்கி மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 91 பேர் கொல்லப்பட்டனர்; 1,400 பேர் காயமடைந்தனர். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நீடித்ததால், குண்டுவெடிப்புக்குப் பிறகும் பதற்றம் தணியவில்லை.
அடுத்த 17 நாளில் இலங்கையில் முதல் போட்டி. பல அணிகளும் பாதுகாப்பு குறித்து வருத்தம் தெரிவித்தன. இன்றுபோல் அப்போது ஐ.சி.சி-யில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகம் இல்லை என்பதாலும், இரண்டு அரசுகளுக்குமிடையே மதரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வித்தியாசங்கள் ஏதுமில்லை என்பதாலும், பாகிஸ்தானுக்கு நிகழ்ந்தது போன்ற எதுவும் அன்று இலங்கைக்கு நிகழவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சோதனை செய்துவிட்டு, இலங்கையில் போட்டி நடக்க கிரீன் சிக்னல் கொடுத்தது ஐ.சி.சி.

ஆனால், இந்த முடிவில் ஒருசில அணிகளுக்கு உடன்பாடில்லை. இலங்கையில் விளையாட இருந்த ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, கென்யா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் ஜிம்பாப்வேவும் கென்யாவும் மட்டுமே போட்டியில் கலந்துகொண்டன. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் போட்டிகளைப் புறக்கணிக்க, அந்தப் போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனால், மிகவும் எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை.
இது ஒருபுறமிருக்க, இலங்கை - இந்தியா அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தில் கலவரம் வெடித்தது. இலங்கை நிர்ணயித்து 252 என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி, 98 ரன்கள் எடுத்திருந்தபோது, 2 விக்கெட்டுகளை இழந்தது. சச்சின் 65 ரன்களில் அவுட்டானதும், மற்ற பேட்ஸ்மேன்கள் வேகவேகமாக பெவிலியன் திரும்ப, 120/8 என்றானது ஸ்கோர் போர்டு. உலகக்கோப்பைக் கனவோடு ஈடன் கார்டனில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பொங்கி எழ, கலவரக் காடானது மைதானம். மைதானத்துக்குள் பாட்டில்களை வீசினார்கள்; கேலரிக்குத் தீ வைத்தார்கள். நிலைமை மோசமானதால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு முக்கியம் எனக் கருதிய நடுவர்கள், இலங்கை வென்றதாக அறிவித்தனர்.

தி ஹூடினி!
உலகக்கோப்பை வரலாற்றின் ஆகச்சிறந்த மாய வித்தையை மொஹாலியில் அரங்கேற்றினார் ஷேன் வார்ன். வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது அரையிறுதியில், 207 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அசத்தல் ஆட்டத்தால் வெற்றியை நோக்கிப் பயணித்தது. 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள். 35 ரன்கள் எடுத்தால் வெற்றி. அப்போதுதான் வார்னே தன் மேஜிக்கை நிகழ்த்தினார். ஒட்டிஸ் கிப்சனை ஒரு ரன்னுக்கு வெளியேற்றியவர், ஜிம்மி ஆடம்ஸை இரண்டு ரன்களுக்கு அனுப்பிவைத்தார். `தி கிரேட் ஹூடினி இஸ் ஹியர்' என்றார்கள் வல்லுநர்கள். அப்படி ஒரு ஸ்பெல்!

ரிச்சி ரிச்சர்ட்சன் ஒருபக்கம் நின்றாலும், இன்னொரு பக்கம் பேட்ஸ்மேன்கள் இல்லாததால், பதற்றம் தொற்றியது. அதை, ஆஸி. பௌலர்கள் அறுவடை செய்ய 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா. இன்று வரை உலகக்கோப்பையின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பர்ஃபாமன்ஸாக இருக்கிறது, வார்னேவின் அந்த ஸ்பெல்.
ஓப்பனிங்னா இப்படி ஆடணும்!
இப்போதைய 'பவர் ப்ளே' என்பதற்கான இலக்கணம் வரையறுக்கப்பட்டது இந்த உலகக்கோப்பையில்தான். முதல் 15 ஓவர்களில் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே 2 ஃபீல்டர்கள்தான் நிற்க வேண்டும் என்பது விதி. முழுக்க முழுக்க ஃபீல்டிங் சார்ந்த விதியாகவே இருந்தது. அது பேட்ஸ்மேன்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று பாடம் எடுத்தது இலங்கையின் தொடக்க ஜோடி. சனத் ஜெயசூர்யா - ரொமேஷ் கலுவிதரனா இருவரும் கிரிக்கெட்டில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினர். பெரும்பாலான ஃபீல்டர்கள், 30 யார்டு சர்க்கிளுக்குள் இருக்க, பந்துகளைப் பறக்கவிடத் தொடங்கினார்கள் இருவரும்.
அப்போதெல்லாம், மற்ற அணிகளின் தொடக்க ஜோடிகள் நிதானமாகவே ஆடுவார்கள். 1992 உலகக்கோப்பையில் நியூசிலாந்தின் மார்ட்டின் குரோவ்தான், முதல் பத்து ஓவர்களில் அடித்து ஆட வேண்டும் என்பதற்காக, பவர்ஹிட்டர்களை ஓப்பனிங் இறக்கியதாகச் சொல்வார்கள். ஆனால், அந்த ஃபார்முலாவை 1996 உலகக்கோப்பையில் நிறைவேற்றிக் காட்டியது ஜெயசூர்யா - கலுவிதரனா ஓப்பனிங் ஜோடி. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விக்கெட் விழுந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் ஒரே குறிக்கோள். அந்த டெம்ப்ளேட்டை உடைத்து, 15 ஓவர்களில் ரன்களை வாரிக்குவித்தது இலங்கை.

இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், முதல் 15 ஓவர்களில் 117 ரன்கள்!
கென்யாவுக்கு எதிராக 123
இங்கிலாந்துடன் காலிறுதியில் 121
மீண்டும் இந்தியாவுடனான அரையிறுதியில் 86
என அப்போதே டி-20 ஆட்டம் காட்டினார்கள். விக்கெட்டைப் பற்றி அவர்கள் இருவரும் கவலைப்படவேயில்லை. சொல்லப்போனால், பல போட்டிகளில் சீக்கிரமே வெளியேறினார்கள். ஆனால், அவர்கள் அமைத்துக்கொடுத்த தொடக்கத்தை, அடுத்து வந்த அரவிந்த் டி சில்வா போன்ற பேட்ஸ்மேன்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
இந்தத் தொடரில் டி சில்வா 448 ரன்கள் அடித்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். ஜெயசூர்யா, 221 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். நியாயப்படி 2 சதங்கள் (ஃபைனல் உள்பட) அடித்து, அந்த அணியின் டாப் ஸ்கோரராகவும் இருந்த டி சில்வாவுக்குத்தான் தொடர் நாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஜெயசூர்யாவுக்கு அந்த விருது கொடுக்கப்பட்டது. காரணம், ஒருநாள் போட்டியின் ஆட்டமுறையில் நடந்த மிகப்பெரிய மாற்றத்துக்கான விதை அவர் விதைத்தது!
டாப் ஸ்கோர்... டாப் ஸ்கோர்...
இந்த உலகக்கோப்பையில் இரண்டு மிகப்பெரிய சாதனைகளும் படைக்கப்பட்டன. கென்யாவைப் பந்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 398 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. 2006-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா போட்டி வரை (434, 438) அதுதான் உலக சாதனையாகவும் நீடித்தது. அதேபோல், உலகக்கோப்பையின் தனிநபர் அதிகபட்சத்தை ஐக்கிய அரபி அமீரக அணிக்கு எதிராகப் பதிவுசெய்தார், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் கேரி கிறிஸ்டன். 159 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 188 ரன்கள் எடுத்திருந்தார். 2015 உலகக்கோப்பையில், கெய்ல் இரட்டைச் சதம் அடிக்கும் வரை, அதுவே உலகக்கோப்பையின் பெஸ்ட் ஸ்கோராக இருந்தது.
முந்தைய பாகங்கள்