நேற்றைய ஐ.பி.எல் களத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் அனல்பறக்க மோதிக்கொண்டன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை `ஜூனியர் டிராவிட்’ ரஹானேவும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை `அன்ப்ரெடிக்டபிள்’ அஸ்வின் தலைமைதாங்கினர்.
தன் அடைமொழிக்கு ஏற்றாற்போலவே, சென்ற சீஸனில் சிறப்பாக ஆடிய கருண் நாயரையும் 8.4 கோடி கொடுத்து வாங்கிய வருண் சக்ரவர்த்தியையும் பென்சில் அமரவைத்து தம்ஸ் அப் காட்டினார் அஸ்வின். ரஹானே `அன்ப்ரெடிக்டபிள்’ எல்லாம் இல்லை என்பதால், நாம் எதிர்பார்த்த அதே ப்ளேயிங் லெவனோடு களமிறங்கினார். டாஸ் வென்ற ராயல்ஸ், பந்து வீச தீர்மானித்தது. `கரீபியன் காலா’ க்றிஸ் கெயிலும் `சோட்டா கோலி’ கே.எல்.ராகுலும் பஞ்சாபின் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். குல்கர்னி வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை, ஸ்வீப்பர் கவர் திசையில் பவுண்டரிக்கு கே.எல்.ராகுல் விரட்ட, இந்த சீஸனுக்கு ஒரு அதிவேக அரைசதம் பார்சேல் எனப் பஞ்சாப் ரசிகர்கள் குஷியாகினர். ஆனால், ராகுல் பார்சல் கட்டுவதற்குள், ராகுலைப் பார்சல்கட்டி பெவிலியனுக்கு டெலிவரி செய்தனர் பவுலர் குல்கர்னியும் கீப்பர் பட்லரும். அதே ஓவரில் குல்கரினி வீசிய பேக் ஆஃப் லென்த் டெலிவரியை, ராகுல் பேக் ஃபூட்டில் ஆடப்போய் திக் எட்ஜாக, பந்தைப் பாய்ந்து பிடித்தார் பட்லர். அதன் பிறகு, கெய்லும் மயங் அகர்வாலும் இணைந்து திட்டம் போட்டுத் தட்டித்தட்டி ஆடிக்கொண்டிருந்தனர். ஆறு ஓவர் பவர் ப்ளேக்குள் குல்கர்னி, கௌதம், ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் என நான்கு பவுலர்களைப் பயன்படுத்தினார் ரஹானே. முதல் பவர் ப்ளேயின் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 32 ரன்கள் எடுத்து ஊர்ந்துகொண்டிருந்தது பஞ்சாப்.
புயலுக்குப் பின் அமைதி என்பது பழமொழி, புயலுக்கு முன் அமைதி என்பது கெய்ல் மொழி. அடித்து வெளுத்து வாங்கப்போகும் புயலுக்கு முன்னான அமைதிதான் அந்த ஆறு ஓவர் என்பதைத் தாமதமாகத்தான் புரிந்துகொண்டிருக்கும் ராஜஸ்தான். கௌதம் வீசிய 8வது ஓவரின் 5வது பந்தை மயங் அகர்வால் லாங் ஆஃபுக்கு கொடியேற்ற, பார்டரில் வைத்து அந்தப் பந்தை அமுக்கினார் தவால் குல்கர்னி. நூலிழையில் சிக்ஸ் மிஸ் ஆகிடுச்சு. அப்போதுதான் `ஆகாங், இது சரிப்பட்டு வராது. வழக்கம்போல நம்ம ரூட்ல போனாத்தான் சரிப்பட்டுவரும்’’ எனப் பஸ் ஏற, பாம்பை எடுக்கும் போண்டா மணியைப்போல் பயங்கரமான ஒரு முடிவை எடுத்தார் கெயில். அடுத்து அவர் பேட்டுக்கு வந்த பந்தெல்லாம் பவுண்டரியில்தான் போய் விழுந்தது. அதிலும், உனத்கட் வீசிய 11வது ஓவரில் ஹேட்ரிக் பவுண்டரி அடித்துவிட்டு, நான்காவது பந்தை சிக்ஸருக்கு விளாசினார். கெய்லைப் பார்த்து சர்ஃபாரஸ் வெறியேற, அவரும் அவர் பங்குக்கு கௌதம் வீசிய 12வது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசிவிட்டு, பெருமூச்சுவிட்டார்.
ராஜஸ்தான் அணியைப் பார்த்து `க்யாரே ஃபீல்ட் செட்டிங்கா’ என ஒத்தையில் நின்று வெளுத்துவாங்கிய `கரீபியன் காலா’ கெய்ல், ஸ்டோக்ஸ் வீசிய 15வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்துவிட்டு, ஐந்தாவது பந்தில் த்ரிபாதியிடம் டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கெயில் மற்றும் சர்ஃப்ராஸ் ஜோடி, மூன்றாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பலம் சேர்த்தது. ஸ்டோக்ஸ் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் பூரான் அவுட்டாக, அதே ஓவரின் கடைசி பந்தை சர்ஃப்ராஸ் சிக்ஸுக்கு விரட்டி, 184-4 என வலுவாக இன்னிங்ஸை முடித்தது பஞ்சாப்.
184 ரன்களை சேஸ் செய்யும் முடிவோடு, `ஜெய்பூர், ராயல்ஸோடு கோட்டைல’ என உத்வேகமாக இன்னிங்ஸை ஓபன் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். கேப்டன் ரஹானேவும் ஜாஸ் பட்லரும் ஓபனர்களாகக் களமிறங்கினர். சாம் கரன் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகளை விளாசி, பஞ்சாப்புக்கு புளிப்புக் காட்டினார் ரஹானே. அதன் பிறகு, ஓவருக்கு ஓரிரு பவுண்டரி என விளாசிக்கொண்டிருந்தது ராயல்ஸ். ஐந்தாவது ஓவரை சாம் கரன் வீச ரெடியாக, `எனக்கு ஒரு என்டர்டெயின்மென்ட் வருது’ என வடிவேலுவைப் பார்தத சுந்தர்.சியைப்போல் தயாரானார் பட்லர். அந்த ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸர், மூன்று பவுண்டரி. ஆட்டத்தின் எட்டாவது ஓவரின் முதல் பந்திலேயே, அஸ்வின் சொடுக்கு பால் போட, ஆஃப் ஸ்டெம்பை காவு கொடுத்துவிட்டு வெளியேறினார் ரஹானே. ரஹானே - பட்லர் இணை, முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. அதன்பின், பட்லருடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர, அஸ்வின் ஓவரை அமைதியாகவும் அன்கித் ராஜ்பூட் ஓவரை அதிரடியாகவும் ஆடிக்கொண்டிருந்தனர்.
அஸ்வின் வீசிய ஆட்டத்தின் 12வது ஓவரில்தான் சர்ச்சைக்குரிய அந்த சம்பவம் அரங்கேறியது. அந்த ஓவரின் கடைசிப் பந்தை வீசவந்த அஸ்வின், நான் ஸ்ட்ரைகர் என்டில் நின்றுக்கொண்டிருந்த பட்லரை மான்கேடிங் முறையில் அவுட்டாக்கி, அப்பீலுக்குச் சென்றார். மூன்றாம் நடுவரும் செக்கச்சிவந்த கலரில் அவுட் எனக் காண்பிக்க, பட்லரின் முகம் கோபத்தில் சிவந்தது. 43 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர் என 69 ரன்களைப் பரிமாறிய பட்லர், ஆட்டத்திலிருந்து வெளியேறினார். அதன் பிறகு, ராஜஸ்தானின் கோட்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சரிய ஆரம்பித்தது. கொஞ்சம் நம்பிக்கையளித்துக்கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தும், கே.எல் ராகுலின் சூப்பர்மேன் கேட்சில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஸ்டோக்ஸ், கௌதம், ஆர்ச்சர், த்ரிபாதி, உனத்கட், கோபால், குல்கர்னி என அடுத்துவந்த அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டும் எடுத்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபிடம் வீழ்ந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 47 பந்துகளில் 79 ரன்கள் அடித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த கெய்லுக்கு, `மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது வழங்கப்பட்டது. அஸ்வின் செய்தது சரியா, தவறா என்பதுதான் இப்போது மேட்ச் ரிசல்ட்டைவிட ஹாட் டாபிக்.