Published:Updated:

ஆஸ்திரேலியா மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து தொடங்க வேண்டும்! #SAvAUS

ஆஸ்திரேலியா மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து தொடங்க வேண்டும்! #SAvAUS

ஆலன் பார்டரின் அதிரடிகள் கேப்டன்ஷிப்போடு முடியவில்லை. தேர்வுக் குழுவின் உறுப்பினராக அவர் செய்ததுதான் பிசிசிஐ உள்பட இன்று உலக கிரிக்கெட் அமைப்புகளுக்கே பெரிய மேனேஜ்மென்ட் பாடம்.

Published:Updated:

ஆஸ்திரேலியா மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து தொடங்க வேண்டும்! #SAvAUS

ஆலன் பார்டரின் அதிரடிகள் கேப்டன்ஷிப்போடு முடியவில்லை. தேர்வுக் குழுவின் உறுப்பினராக அவர் செய்ததுதான் பிசிசிஐ உள்பட இன்று உலக கிரிக்கெட் அமைப்புகளுக்கே பெரிய மேனேஜ்மென்ட் பாடம்.

ஆஸ்திரேலியா மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து தொடங்க வேண்டும்! #SAvAUS

தோல்வியை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?  தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், தோல்வி பெற்றுவிடுவோமோ என்று பயப்படுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. 

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அவமானமாக தென் ஆப்பிரிக்க மண்ணில் 3-1 என டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது ஆஸ்திரேலியா. கடைசி டெஸ்ட்டில் 492 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என்பது கடந்த 90 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சந்திக்காத சறுக்கல்.

உலகுக்கே கிரிக்கெட் எப்படி ஆடப்படவேண்டும், கேப்டன்ஷிப் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்த ஆஸ்திரேலியா இப்படி ஒரு மாபெரும் அவமானத்துக்குள் வந்துவிழும் என்பது யாருமே எதிர்பாராதது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை கட்டி எழுப்பிய, ஆஸ்திரேலியாவின் மிக முக்கியக் கேப்டனான ஆலன் பார்டரை மறந்து, அவர் வழியிலிருந்து விலகியதுதான் இப்போதைய ஸ்மித்தின் அழிவுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அவமானத்துக்கும் காரணம்.

ஆலன் பார்டரிடம் வெற்றிபெற வேண்டும் என்கிற வெறி இருந்தது. ஆனால், தோல்விக்காக அவர் பயப்படவில்லை என்பதுதான் இன்றைய கிரிக்கெட் உலகம் நினைவுகூர வேண்டிய முக்கியப் பாடம். இதை வெறும் கிரிக்கெட் கேப்டன்ஷிப்போடு மட்டும் ஒப்பிடமுடியாது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இந்த இரண்டு ஆஸ்திரேலியர்களே உதாரணம். 

ஒரு தலைவன் இருக்கிறான்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை ஆலன் பார்டருக்கு முன், ஆலன் பார்டருக்குப் பின் என்று பிரிக்கலாம். ஐந்து உலகக்கோப்பைகளை வென்று கிரிக்கெட் உலகின் அசைக்கமுடியாத அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா, ஆலன் பார்டரின் வருகைக்கு முன்பு `தோத்தாங்கோளீஸ்' என்று அவமானப்படுத்தப்பட்ட அணிதான். 

1983-ம் ஆண்டு முதல்முறையாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியை ஓரங்கட்டி உலகக்கோப்பையை வெல்கிறது இந்தியா. 'இனி இந்தியாதான் கிரிக்கெட்டை ஆளப்போகிறது' என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தபோது தனி ஒரு மனிதனாக ஆஸ்திரேலியாவைக் கட்டி எழுப்பினார் ஆலன் பார்டர். அவர் கிரிக்கெட்டின் புதிய பேரரசாக ஆஸ்திரேலியாவை உருவாக்க இந்தியாவின் ஃபார்முலாவைப் பின்பற்றவில்லை. 

1984-ம் ஆண்டு கிம் ஹியூஸிடமிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பு ஆலன் பார்டருக்கு வந்தது. ``தொடர் விமர்சனங்களால், அவமானங்களால் மனம் தாள முடியாத துயரத்தோடு கேப்டன் பொறுப்பைவிட்டு விலகுகிறேன்'' என்று செய்தியாளர்கள் முன் அழுதுகொண்டே சொன்னார் ஹியூஸ். அந்த அழுகைதான் ஒருவகையில் பார்டரைப் பலப்படுத்தியது. `` `நாம் ஒரு தோல்வியடைந்த, நம்பிக்கையற்ற அணிக்குத்தான் கேப்டனாகப் பொறுப்பேற்கிறோம். ஆனால், நான் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது' என்கிற முடிவை அப்போதுதான் எடுத்தேன்'' என்கிறார் ஆலன் பார்டர்.  

ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை முதல் போட்டியில் சந்தித்தது. அடிலெய்டில் நடைபெற்ற அந்த டெஸ்ட்டில் 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா. அடுத்தடுத்தும் தோல்விகள்தான். 1985 ஆஷஸ் போட்டியில் 1-3 என இங்கிலாந்திடம் தொடரை இழந்தது. ஆனால், தனியொரு பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலிய அணியை முதுகில் தூக்கிச் சுமக்க ஆரம்பித்தார் ஆலன் பார்டர். உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுக்க ஆரம்பித்தார். ``நம்மால் வெற்றிபெற முடியாது. தோல்விதான் அடையப்போகிறோம். ஆனால், அவ்வளவு சீக்கிரத்தில் தோற்றுவிடக் கூடாது. எதிர் அணியின் வெற்றியைத் தாமதப்படுத்திகொண்டேயிருக்க வேண்டும்'' என்பதுதான் ஆலன் பார்டர் கற்றுத்தரும் முதல் கேப்டன்ஷிப் பாடம்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டேயிருந்தாலும் தனி பேட்ஸ்மேனாக களத்தில் நின்று எதிர் அணியின் வெற்றியைத் தாமதப்படுத்திக்கொண்டேயிருப்பார் பார்டர். ஆஷஸுக்கு அடுத்து நியூஸிலாந்து பயணம். `அங்கேயும் பார்டர் மட்டுமே விளையாடுவார். எதிர் அணி வெற்றிபெறும்' என்கிற அதே காட்சிகள்தாம். ஆஸ்திரேலியா 1 டெஸ்ட்டில் வெற்றிபெற 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. ஆனால், வெளியே சத்தமில்லாமல் அணிக்குள் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்திக்கொண்டேயிருந்தார் ஆலன் பார்டர். 

`தோல்வியடையப்போகிறோம் என்றாலும் யாருக்கும் அடிபணியாதீர்கள். தோல்வியடைந்தாலும் நாம்தான் உலகின் சிறந்த அணியாக மாறப்போகிறோம்' என்கிற நம்பிக்கையை அணிக்குள் விதைத்துக்கொண்டேயிருந்தார். இன்னொருபக்கம் அணிக்குள் இளம் வீரர்களைச் சேர்த்துக்கொண்டேயிருந்தார். ஸ்டீவ் வாக் அப்போதுதான் அணிக்குள் வந்தார். டேவிட் பூன் ஃபார்முக்கு வந்தார்.

ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை கொடுத்த தொடர் இந்தியாவுக்கு எதிரான தொடர்தான். முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. டேவிட் பூன்,  ஆலன் பார்டர் சதம் அடிக்க, டீன் ஜோன்ஸ் இரட்டை சதம் அடித்தார். இந்திய அணியும் கடுமையாகப் போராட வரலாறு காணாத போட்டியாக டை-யில் முடிந்தது சென்னை டெஸ்ட். அடுத்த இரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்தன. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கிட்டத்தட்ட எல்லோருமே ஃபார்முக்கு வந்த தொடர் அதுதான். இந்தியாவில் எப்படி ஆட வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய வீரர்கள் முழுமையாகக் கற்றுக்கொண்ட தொடர் அதுதான்.  

1987 கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தியாவில்... கிரிக்கெட்டில் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு ஸ்கெட்ச் போடும் வித்தையை அப்போதுதான் அறிமுகப்படுத்தினார் ஆலன் பார்டர். மிட் ஆன், மிட் ஆஃப், கவர், மிட் விக்கெட் எனப் பாரம்பர்யமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த ஃபீல்டிங் பொசிஷனை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தார். சில்லி மிட் விக்கெட், கல்லி, டீப் எக்ஸ்ட்ரா கவர் என மறந்துபோயிருந்த பல ஃபீல்டிங் பொசிஷன்களை மீண்டும் உயிர்பெற வைத்தார். எதிர் அணியின் பேட்ஸ்மேன்கள் எங்கு அடிக்கடி ஆடுவார்களோ அந்தத் திசையில் சரியாக ஃபீல்டர்களை நிறுத்த எதிர் அணிகள் ஆட்டம் காண ஆரம்பித்தன. ஆஸ்திரேலியா எழுந்து நின்றது.  உலகக்கோப்பையை வென்றது. தொடர் தோல்விகளைச் சந்திக்கும் அணியாக இருந்த ஆஸ்திரேலியா தொடர் வெற்றிகள் சந்திக்கும் அணியாக அதிரடி மாற்றம் கண்டது. எதிரியின் பலத்தைக் கண்டறிந்து அதிரடியாகத் தாக்குவதுதான் பார்டர் கற்றுத்தந்த இரண்டாவது கேப்டன்ஷிப் பாடம். 

ஆலன் பார்டரின் அதிரடிகள் கேப்டன்ஷிப்போடு முடியவில்லை. தேர்வுக் குழுவின் உறுப்பினராக அவர் செய்ததுதான் பிசிசிஐ உள்பட இன்று உலக கிரிக்கெட் அமைப்புகளுக்கே பெரிய மேனேஜ்மென்ட் பாடம். ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்டீவ் வாக்கை கேப்டன்ஷிப்பிலிருந்து இறக்கியவர் பார்டர்தான். இயான் ஹீலிக்கும், மார்க் வாக்கும் ஓய்வுகொடுத்து ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங் என இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கும் ஆலன் பார்டர்தான் காரணம். ``இவர் எப்படிப்பட்ட வீரர் தெரியுமா? இவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமா? எனப் பழைய பெர்ஃபாமென்ஸ்களைப் பேசாதீர்கள். எனக்கு இப்போது திறமையாக விளையாடும் 11 வீரர்கள்தான் வேண்டும்'' என்று சொன்னதோடு அதை செய்தும் காட்டியவர் ஆலன் பார்டர். அவர் வகுத்த பாதைதான் 1999, 2003, 2007 எனத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை ஹாட்ரிக் உலகக்கோப்பைகளை வெல்லவைத்தது. `அணிக்கு உதவாதவர் என்றால் அவர் எவ்வளவு பெரிய சாதனைகள் செய்தவர் என்றாலும் ஓரங்கட்டு' என்பதுதான் ஆலன் பார்டர் சொல்லித்தரும் கடைசிப் பாடம். 

அணியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் ஆலன் பார்டர். ஆனால், அணியின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் ஸ்டீவ் ஸ்மித்திடம் இல்லை. வீரர்கள் தவறு செய்தால் அதற்கு வக்காலத்து வாங்கும் கேப்டனாகத்தான் இருந்தாரே தவிர தவறிழைக்கும் வீரர்களைத் தட்டிக் கேட்கும் கேப்டனாக இல்லை. மிக முக்கியமாக மற்றவர்கள் சொல்லும் அபத்தமான ஆலோசனைகளை அவர் ஏற்க ஆரம்பித்ததுதான் அழிவின் உச்சம். ஒரே ஊர்க்காரரான, உதவி கேப்டன் டேவிட் வார்னரின் ஆலோசனைகளைக் கேட்டு, அதன் வழியில் நடந்து இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறார் ஸ்மித். ஒரு பேட்ஸ்மேனாக டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்தபோதும் கேப்டனுக்கான எல்லாத் தகுதிகளையும் அவர் இழந்திருந்ததுதான் எல்லா அவமானங்களுக்குமான முதல் காரணம். ஸ்மித்தின் தவறான வழிகாட்டுதலால், முன் உதாரணத்தால் தென் ஆப்பிரிக்க மண்ணில் தடுமாறி இன்று மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து தொடங்கவேண்டும்!