இது ஒரு போட்டியின் முடிவு மட்டும்தானா..? இல்லை ஒரு தொடரின் முடிவா...? இல்லை... இது ஒரு சகாப்தத்தின் முடிவாகவும் இருக்கலாம். கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள். ஆஸ்திரேலியா... நேற்று வரை உலக சாம்பியன் பட்டத்தோடு வலம் வந்தவர்கள், இன்று ஏமாற்றுக்கார முத்திரையோடு முடங்கிக் கிடக்கிறார்கள். ஒரே ஒரு சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆணிவேரை ஆட்டிவிட்டது. அவர்களுக்கு அவர்களே அசிங்கத்தைத் தேடிக்கொண்டார்கள். சொல்லப்போனால், இது அவர்களுக்குத் தேவையான ஒன்றுதான்.
டி காக் vs வார்னர், லயான் - டி வில்லியர்ஸ், ரபாடா vs ஸ்மித், வார்னர் vs ரபாடா என இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குள் பல யுத்தங்கள் நடந்து முடிந்திருந்தன. சில மாதங்கள் முன்பு இதே மண்ணில், விராட் கோலி எமோஷன்களைக் கொட்டிக்கொண்டிருந்தார். ஆனால், அப்போதெல்லாம் தென்னாப்பிரிக்க வீரர்கள் அமைதியாக இருந்தனர். அதை ஸ்போர்டிவாக டீல் செய்தனர். காரணம், எந்த வகையிலும் அது எல்லையை மீறவில்லை. ஆனால், ஆஸ்திரேலியர்களை தென்னாப்பிரிக்க வீரர்களால் அப்படி டீல் செய்ய முடியவில்லை. காரணம், ஆஸி வீரர்கள் ஸ்லெட்ஜிங்கைக் கூடப் பெர்சனல் வாழ்க்கை வரை எடுத்துச் சென்றனர். எல்லை மீறினர். கைகலப்பு வரை கூட செல்லத் தயாராக இருந்தனர். ஒருவழியாக அத்தனை நாடகங்களும் முடிந்து இந்தப் போட்டி தொடங்கியது. இப்போது மிகப்பெரிய ஒழுக்கக்கேட்டுப் பிரச்னையில் மாட்டிக்கொண்டுள்ளது ஆஸ்திரேலியா. ' ball tampering' பூதம் வெடித்து, ஆஸ்திரேலியாவை ஒரு காட்டு காட்டியிருக்கிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட்தான் இழந்திருக்கிறது. 121 ரன்கள் முன்னிலை. 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுவிட்டால், வெற்றி பெறுவது கடினம். தொடரை வெல்வது முடியாமல் போய்விடும். எப்படியேனும் விரைவில் தென்னாப்பிரிக்காவை ஆல் அவுட் செய்யவேண்டும். ஆனால், எப்படி...? ஆட்டத்தின் மூன்றாவது நாள் மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் இருந்த அனைவரையும் இந்தக் கேள்வி பாதித்திருக்கும். அந்த இடத்தில் இந்தியா, நியூசிலாந்து போன்ற அணிகள் இருந்திருந்தால், விராட் கோலி, வில்லியம்ஸன் போன்றவர்கள் கேப்டன்களாக இருந்திருந்தால் 'பௌலிங்கில் மாற்றம் கொண்டுவருவது எப்படி' என்று ஆலோசித்திருப்பார்கள். ஆனால், இவர்கள் ஆஸ்திரேலியர்கள் ஆயிற்றே... இவர்களின் ஆலோசனை வேறு மாதிரி இருந்தது.
'தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் எடுக்கிறார்கள். டி வில்லியர்ஸ் வேறு ஃபார்மில் இருக்கிறார். பந்துவீச்சில் மாற்றம் செய்து பயனில்லை. பந்தையே மாற்றினால்...' ஆஸ்திரேலியர்களின் அசிங்கமான திட்டம் ரெடி! அவர்கள் எடுத்த இந்த முடிவை நடைமுறைக்குக் கொண்டுவரும் பொறுப்பு, அனுபவமில்லாத பேங்க்ராஃப்ட் கைகளில் திணிக்கப்படுகிறது. சீனியர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் என்ற பிரஷர் அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. கவர் டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ்களோடு சேர்த்து, 'ஸ்லெட்ஜிங் செய்வது எப்படி', 'கோல்மால் செய்தேனும் வெல்வது எப்படி' என்ற பாடங்களையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஏற்கெனவே கற்றுக்கொடுத்திருந்ததால், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள இவரும் தயங்கவில்லை. கையில் மஞ்சள் நிறத்தில் ஒரு டேப் எடுத்துக்கொண்டு இரண்டாவது செஷனில் களம் கண்டார்.
சரி, எதற்காக இந்தத் திட்டம்? இதனால் அப்படியென்ன மாற்றம் நிகழ்ந்துவிடும்? புதிய பந்தில் வேகப்பந்துவீச்சாளர்களால் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமோ, அதேபோல் பழைய பந்தாலும் அவர்களால் தாக்கம் ஏற்படுத்த முடியும். காரணம் - பழைய பந்துதான் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய உதவும். புதிய பந்துகள் இன்ஸ்விங் ஆவதைக் கூடக் கணிப்பது எளிது. ஆனால், ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளைக் கணிப்பது கடினம். அதனால், பந்தை ரிவர்ஸ் ஸ்விங்குக்கு உதவும் வகையில் பழையதாக்கவேண்டும். இதுதான் அந்த அசைன்மென்ட்டின் நோக்கம்.
இன்ஃபீல்டில் நின்றிருந்த பேங்க்ராஃப்ட் கையில் பந்து கிடைத்ததும், தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்த டேப்பை எடுத்து, பந்தைத் தேய்க்கத் தொடங்குகிறார். அவ்வப்போது அவர் இப்படிச் செய்வதை, ட்ரெஸ்ஸிங் ரூம் கம்ப்யூட்டரில் பார்க்கிறார் பயிற்சியாளர் டேரன் லேமன். உடனடியாக சப்ஸ்டிட்யூட் ஜோஷ் ஹேண்ட்ஸ்கோம்ப் வாகி-டாகி மூலம் பயிற்சியாளரால் அழைக்கப்படுகிறார். 'பேங்க்ராஃப்ட் செய்வதெல்லாம் கேமராவில் பதிவாகிக்கொண்டிருக்கிறது. அதை நிறுத்தச் சொல்'... களத்துக்குள் பயிற்சியாளரின் மெசேஜை எடுத்துச் செல்கிறார் ஹேண்ட்ஸ்கோம்ப். இதற்குள் நடுவர்கள் நைஜல் லாங், ரிச்சேர்ட் இல்லிங்வொர்த் இருவருக்கும் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.
பயிற்சியாளரின் எச்சரிக்கையைக் கேட்டதும், அந்த டேப்பை தன் பேன்ட்டுக்குள் மறைக்கிறார் பேங்க்ராஃப்ட். நடுவர்களின் சந்தேகம் வலுப்பெற, 42-வது ஓவர் முடிந்ததும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் நின்றிருந்த பேங்க்ராஃப்டை அழைத்துப் பேசுகிறார்கள். தன் ஆடையில் இருப்பது என்னவென்று கேட்கிறார்கள். பேன்ட் பாக்கெட்டிலிருந்து கறுப்பு நிறத் துணி ஒன்றை எடுத்து நீட்டுகிறார். சில நிமிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் அதில் இணைகிறார். ஆட்டம் தொடர்கிறது. ஆனால், அதற்குள் சோஷியல் மீடியா சூடு பிடித்துவிட்டது. 'பேங்க்ராஃப்ட் பாக்கெட்டில் இருந்தது என்ன?' என்ற கேள்வி ட்விட்டர் குருவியை விட வேகமாகப் பறந்தது. ரீப்ளேக்கள் போடப் படுகின்றன. அவர் மறைத்தது மஞ்சள் நிறப் பொருள் என்பது தெளிவாகிறது. பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய, 'ball tampering' செய்துள்ளார் என்பதும் நிரூபனமாகிறது.
எல்லாம் தெரியவந்தும்கூட அதே பந்தில் ஆட்டம் தொடர்கிறது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மார்க்ரம் நின்றார். ஜீனியஸ் டி வில்லியர்ஸ் நிலைத்து நின்றார். தென்னாப்பிரிக்கா ரன் குவித்தது. 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள். மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பிரஸ் மீட்... கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கேமரான் பேங்க்ராஃப்ட் இருவரும் மைக்கின் முன் அமர்கிறார்கள். கேள்விகளால் இருவரையும் பத்திரிகையாளர்கள் துளைக்கிறார்கள்.
நவம்பர் 27, 2017... நிலைமை வேறு மாதிரி இருந்தது. காபாவில் நடந்த முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது ஆஸ்திரேலியா. போட்டிக்குப் பின்பான பத்திரிகையாள சந்திப்பு. அதே இருவர்... ஸ்மித் & பேங்க்ராஃப்ட். இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ பற்றிய கேள்விக்கு, பேங்க்ராஃப்ட் செமயாக கலாய்க்க, ஸ்மித் அடக்கமுடியாமல் சிரிக்க, அந்த ப்ரஸ்மீட்டே கலகலப்பாய் இருந்தது. கேப்டன் ஜோ ரூட் உள்பட, அனைத்து இங்கிலாந்து வீரர்களையும் எரிச்சலூட்டியது அந்தச் சம்பவம். அதுபோல் ஒரு ஜாலி ப்ரஸ்மீட் கிரிக்கெட் வரலாற்றிலேயே நடந்திருக்காது.அது நடந்து நான்கு மாதம்தான் கடந்துள்ளது. இப்போது எல்லாம் தலைகீழ்!
இருவராலும், அன்று சிரித்ததில் ஒரு சதவிகிதம் கூடச் சிரிக்க முடியவில்லை. மாறாக உள்ளம் முழுதும் குற்றவுணர்ச்சி. அவமானம். "இதற்காக நான் வருத்தப் படுகிறேன். இது ஆட்டத்தின் நேர்மைக்குப் புறம்பானது. என் நேர்மை, என் அணியின் நேர்மைக்கு எதிராகக் கேள்விகள் எழுந்துள்ளன. அது சரியானதுதான். இது முற்றிலும் தவறானதுதான். இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுதான் முதல்முறை. இனி இது நிச்சயம் நடக்காது. அதுவும் என் தலைமையில் இனி இது நடக்காது என்று உறுதி கூறுகிறேன்" என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் ஆஸி கேப்டன். மேலும், இந்த விஷயம் பயிற்சியாளருக்குத் தெரியாது என்றும் கூறினார். பேங்க்ராஃப்ட் தான் செய்தவை அனைத்தையும் அப்பாவி அடியாள் போல் ஒப்புக்கொண்டுவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.
அஸ்திரேலியர்கள் இப்படிச் செய்ததில் ஆச்சர்யம் இல்லை. வெற்றிக்காக அவர்கள் எதையும் செய்யக்கூடியவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தங்களின் தவறுகளை அவர்கள் ஒப்புக்கொண்டதே பெரும் ஆச்சர்யம். அப்ரூவரானால் தண்டனை குறைவு என்ற 'கோலிவுட் சட்டத்தை' நினைத்து, குற்றத்தை ஒப்புக்கொண்டார்களோ என்னவோ. ஆனால், அந்த ப்ரஸ் மீட்டிலும் பொய்கள் சொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டுகிறார் இங்கிலாந்து வீரர் ஸ்டுவார்ட் பிராட். "ப்ரஸ் மீட்டின்போது, 'முதல் முறையாக நடந்திருக்கிறது' என்று சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் முடிந்த ஆஷஸ் தொடரைப் பார்த்தால் தெரியும். ரிவர்ஸ் ஸ்விங்குக்கு சுத்தமாக ஒத்துழைக்காத தருணங்களிலும், அவர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்கள். பந்தின் தன்மையை மாற்றுவதை அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்த முறையை இந்தப் போட்டிக்கு மட்டும் ஏன் மாற்றினார்கள் என்றுதான் தெரியவில்லை" என்று கலாய்த்துள்ளார் பிராட். அன்று அவர்கள் இருவரும் இங்கிலாந்தை நக்கல் செய்தனர். இன்று ப்ராட் செய்கிறார். தட் க்ரீஸ் டப்பாவ எப்படி ஒதச்ச மொமன்ட்!
ஆக்லாந்தில் நியூசிலாந்திடம் செமத்தியாக அடி வாங்கிக்கொண்டிருக்கிறது இங்கிலாந்து. இந்த நிலைமையிலும் ஆர்வமாக முன்வந்து வந்து ஆஸ்திரேலியாவை வறுத்தெடுத்திருக்கிறார். இதற்கு ஒரே காரணம் - அவர்கள் ஆஸ்திரேலியர்கள். அவர்கள் விளையாடியதில் எந்தத் தொடர்தான் பிரச்னை இல்லாமல் நடந்திருக்கிறது? டிசம்பர் மாதம் முடிந்த 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின்போது, ஸ்டீவ் ஸ்ம்த் - பிராட் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். பேட்டிங்கின்போது பந்தை விடுவதில்கூட ஸ்மித், நக்கல் செய்யும் விதமாகத்தான் நடந்துகொண்டார். அவர்கள் வாக்குவாதம் செய்வதும், நடுவர்கள் அவர்களை சமாதானம் செய்வதுமே வாடிக்கையாக இருந்தது. இதைப் பற்றி சக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு "61 சராசரி வைத்துள்ளவர், என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்று மிகக் கேவலமான பதில் ஒன்றை சர்வ சாதாரணமாகக் கூறினார்.
ஆஸ்திரேலிய வீரர்களின் மைண்ட் செட் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு சோறு பதம். இது காலம் காலமாக நடந்துவருவதுதான். கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது முதல், ஸ்லெட்ஜிங்கை ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், அன்றெல்லாம் அதிலும் ஒரு ஸ்போர்டிவ் தன்மை இருந்தது. 2003 அடிலெய்ட் டெஸ்டின்போது "சச்சினுக்கு நீ கேப்டனா..? வெக்கமாயில்ல..?" என்று கங்குலி பேட்டிங் செய்யும்போது அவரை வம்பிழுப்பார் ஹெய்டன். ஆனால், கங்குலி அப்போட்டியில் சதம் அடித்ததும், மனமாற களத்திலேயே பாராட்டுவார். அந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் இப்போது கொஞ்சமும் ஆஸ்திரேலியர்களிடத்தில் இல்லை.
சராசரி 61 வைத்திருக்கும் தனிநபர் எதுவேண்டுமானாலும் செய்யலாமெனில் நடப்பு சாம்பியன், நான்கு முறை சாம்பியன் என்னென்ன வேண்டுமானாலும் செய்யலாம்தானே..? அதுதான் அவர்களின் மனநிலை. இரண்டு ஆண்டுகள் முன்பு தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்த பின், ஆஸ்திரேலியாவின் எதிர்காலமும், ஸ்மித்தின் கேப்டன்சியும் கேள்விக்குள்ளாக, அதுமுதல் ஆஸ்திரேலிய அணியின் அணுகுமுறையும், அதன் கேப்டனின் அணுகுமுறையும் மாறிவிட்டது. வெற்றிக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்டனர். நேர்மை என்பதை அடியோடு மறந்துவிட்டனர். ரிவ்யூ எடுக்க ட்ரஸ்ஸிங் ரூம் உதவியை நாடுவது, எதிரணியைக் கேலி செய்வது, பெர்சனலாகத் தாக்குவது எனத் தொடர்ந்து தவறான பாதையிலே பயணித்தவர்கள் இன்று பந்தை சேதப்படுத்துவதில் வந்து நிற்கிறார்கள்.
இந்தப் பிரச்னை வெடித்ததும், கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2 நிர்வாகிகளை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பத் தயாராகிவிட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் வீரர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார். நிர்வாகத்தின் தூண்டுதலால், ஸ்மித், வார்னர் ராஜினாமா செய்துவிட்டனர். போட்டியின் பரிசளிப்பு விழாவின்போது ஆஸ்திரேலிய கேப்டனாகப் பேசியவர் டிம் பெய்ன். இப்படி இரண்டே நாள்களில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. இதிலும்கூட, அவர்கள் பந்தை சேதப்படுத்தியது பிரச்னையை பெரிதாக்கவில்லை. இதற்கு முன்பு பலமுறை நடந்துள்ளது. பல வீரர்களும் அதை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இதை ஆஸ்திரேலியா திட்டமிட்டுச் செய்தது என்பதுதான் அவர்கள் மீது கோபம் கொள்ளச் செய்கிறது. வெற்றிக்காக இத்தனை கேவலமாக நடந்துகொள்ளவேண்டுமா? அவர்கள் எதிர்த்து விளையாடிக்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா எத்தனை உலகக் கோப்பையை வென்றது? ஆனால், அவர்கள் உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்றபோது இந்திய கண்கலங்கியதே..! வெற்றியின் மூலம் மட்டும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட முடியுமா?
இப்படியெல்லாம் திட்டம் தீட்டி என்ன நடந்தது? இரண்டு வீரர்களின் பதவி போனது. இருவருக்கு சஸ்பென்ஷன். இன்னும் 3 பேர் வரை சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கான வாய்ப்பு. அனைத்தையும் தாண்டி, இரண்டாவது இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆல் அவுட். இரண்டு நாள் கூத்து, அந்த அணியை மன அளவில் எப்படி பாதித்துள்ளது. ஏற்கெனவே வீரர்களுடன் சம்பள விவகாரத்தில் மோதிய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம், இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சஸ்பென்ஷன், அபராதம் அதையெல்லாம் சரிசெய்துவிடலாம். ஆனால், அணியின் மொத்த கெமிஸ்ட்ரியையும் பாதிப்புக்குள்ளாகும். பிரஷர் கூடும். சூதாட்டப் புகார் சமயத்தில் இந்தியா இருந்த நிலைமைதான் இப்போது இவர்களுக்கு. இரண்டு நாள்கள் முன்புவரை சாம்பியன்ஸ்... இப்போது சீட்டர்ஸ்... இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய அடி. தங்களின் ஆணவத்தை, கேவலமான அனுகுமுறையை மாற்றிக்கொள்ள அவர்களே வைத்துக்கொண்ட சாட்டையடி.