ஆக்ரோஷ ஆக்ஷன்கள் எல்லாம் தன் அகராதியிலேயே இல்லை என்பதுதான் தோனியின் கேரக்டர். கடந்த 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், மகேந்திர சிங் தோனியின் அணுகுமுறை என்பது புத்திக்கூர்மைகொண்ட ஒரு புல்லட் புரூஃப் ஜாக்கெட் போன்று தக்க பாதுகாப்பானதாக இருக்கும். ஆம், எதிரணிகளின் ஸ்லெட்ஜிங் பிரெஷர் பூச்சாண்டி எல்லாவற்றையும் பில்டப் இல்லாமல் ஹேண்டில் பண்ணுவதுதான் தோனியின் சிறப்பம்சம்! அதேசமயம், அவ்வப்போது சிங்கத்தைச் சீண்டிப்பார்க்கும் சில வீரர்களை தண்டிக்கவும் தவறியதில்லை. `தோனியின் `கோபம்'ங்கிறது வேலூர் வெயில்ல குளிர்க்காய்ச்சல் வருவது மாதிரி ஒவ்வொருத்தரையும் வித்தியாசமா டீல் செய்யும்.'
2016-ம் ஆண்டில் ஆறாவது T20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவு அணியிடம் இந்தியா தோற்று வெளியேறியது. அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தோனியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. முப்பதுகளில் இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரரிடம் அனைவரும் சாதாரணமாகக் கேட்கும் கேள்விதான், ``ஓய்வுபெற இதுதான் சரியான சமயமோ?”
தோனி உடனடியாக அந்த வெளிநாட்டு நிருபரை அழைத்து அருகே உட்கார வைத்துக்கொண்டார். விக்கெட்டுகளுக்கு இடையே தான் ஓடும் வேகத்தைக் குறிப்பிட்டு, ``என் உடல் தகுதி போதுமானதாக இல்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்டார். மேலும், அந்த நிருபரிடம், ``நான் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை களத்தில் நிற்பேன் என நினைக்கிறீர்களா?” என்று அடுத்த கேள்வியை வீசினார். ஒரு பத்திரிகையாளரை, தன் அருகே உட்காரவைக்கப்பட்டு பிரபலமான இந்திய கேப்டன் ஒருவர் எதிர் கேள்வி கேட்டது பத்திரிகையாளருக்குப் பெரும் சங்கடமாக இருந்திருக்கும். இப்படி புத்திசாலித்தனமாக ஜில்லுனு கோபத்தை வெளிக்காட்டும் திறமை தோனிக்கு மட்டுமே உண்டு.
பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் தொடரிலேயே பின்னிப்பெடலெடுத்தார் தோனி. அப்போது அஃப்ரிடி தோனியிடம் வம்பிழுக்க, தனது ஆக்ரோஷங்களை ஒரே ஓவரில் சிக்ஸரும் பெளண்டரியுமாகச் சுடச்சுட பதிலடி கொடுப்பார்.
இதேபோல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் மைக்கேல் ஹஸ்ஸி தோனியால் ஸ்டம்ப்பிங் செய்யப்பட்டார். கிரீஸின் மேலே கால் இருந்ததால் முதலில் அவுட் தந்து, பிறகு ஹஸ்ஸியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தனர். இதனால் கோபமடைந்த தோனி, கள நடுவர் பில்லி பெளடனிடம் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரன் எடுக்க ஓடும்போது மிட்செல் ஜான்சன் இடையூறு செய்ததால் கீழே விழுந்து எழுந்த தோனி, உடனே முறைத்து தன் கோபத்தைக் காட்டியவாறே அந்த ஆட்டத்தில் சதம் விளாசினார். உண்மையைச் சொல்லவேண்டுமானால், அந்த இடையூறால் வந்த கோபத்தால்தான் திடீரென அதிரடிக்கு மாறுவார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் போட்டியில் பும்ரா ஈஸியான ரன் அவுட்டை மிஸ் செய்ய, சிறிது கோபப்பட்டார் தோனி.
2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டாவது ரன்னுக்கு யுவராஜ்சிங் மெதுவாக ஓடியதற்கு சற்று கோபத்துடன் ரியாக்ட் செய்தார். அதன் பிறகு அதிரடி பாணியில் வெற்றிக்கோப்பையை உச்சி முகரச் செய்வார். தற்போதும் இதேபோல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் மனிஷ் பாண்டேவை ``ஏய், இங்க பாரு, அங்க என்ன பார்வை? கவனம் இங்க இருக்கட்டும்” என்று எதிர்முனையிலிருந்து இந்தியில் கத்தினார் தோனி. ஆனால், இந்தக் கோபத்தில் சகவீரரைத் திட்டினார் என்பதைவிட தட்டி எழுப்பினார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
2016-ம் ஆண்டில் மிர்பூரில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பந்து வீசிய முஸ்தாபிஜூர் ரஹ்மான் ரன் எடுக்க ஓடும்போது அடிக்கடி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இடையூறு செய்துகொண்டே இருந்தார். தோனிக்கும் இதேபோல் செய்ததால் தனது தோள்பட்டையால் அவரை இடித்து நிலைகுலையச் செய்து மறைமுகமாக தனது கோபத்தைக் காட்டினார்.