சென்னை கோவளத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகர் பச்சை, என்பவர் அலைச் சறுக்குப் போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். அலைச்சறுக்கு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.
மலையேற்றத்தின்மீது ஆர்வம்கொண்ட இவருக்கு, எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது பெரும் கனவாக இருந்துள்ளது. இதற்காக கடந்த ஒராண்டாக மலையேற்றப் பயற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது கடுமையான பனி, குளிரைத் தாங்கவேண்டும். இதற்காக மணாலி, சோலாங் உள்ளிட்ட குளிர் நிறைந்த மலைகளில் மலையேற்றம் செய்து பயிற்சி எடுத்துள்ளார்.

கடுமையான பயற்சிகளுக்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்குத் தயாரான ராஜசேகர், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் பயணத்தைத் தொடங்கி 8,850 மீட்டர் உயரத்தை நேற்று (மே 19) அதிகாலை 5.30 மணியளவில் அடைந்துள்ளார். ஒரு மாதம் கடுமையான குளிர், சறுக்கல்கள் என பல தடைகளைத் தாண்டி விடாமுயற்சியுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி, பேஸ்கேம்ப்க்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார்.
இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு ஊட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழர் என்ற சாதனையை படைத்தார். இதையடுத்து, எவரெஸ்ட் உச்சியை ஏறி சாதனை படைத்த இரண்டாவது தமிழர் என்ற பெருமையப் பெற்றுள்ளார் கோவளத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகர் பச்சை.

இந்நிலையில் ராஜசேகரின் இந்த விடா முயற்சியையும், அவரது சாதனையையும் பாராட்டி பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ராஜசேகரை வாழ்த்தி, “பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய #Everest சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.