15 வது ஹாக்கி உலகக்கோப்பை ஒடிசாவில் வரும் 13 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட மொத்தம் 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.
சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணி பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் அணிகளும் இடம் பிடித்துள்ளன. தனது முதல் போட்டியில் இந்திய அணி ஸ்பெயினுடன் மோதவிருக்கிறது.

இந்நிலையில் ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள உலகக்கோப்பை கிராமத்தை ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்திருக்கிறார். 15 மாதங்களில் இந்த உலகக்கோப்பை கிராமம் உருவாக்கபட்டுள்ளது. இதில் போட்டியில் பங்கேற்கும் ஹாக்கி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்கு ஏதுவாக வசதிகளுடன் கூடிய 225 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிராமத்தைத் திறந்து வைத்த பின்னர் இந்திய அணியில் பங்கேற்கும் ஹாக்கி வீரர்களை முதல்வர் நவீன் பட்நாயக் சந்தித்தார். அப்போது இந்திய அணி உலகக்கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.