
துபாய்: 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 15-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூஸிலாந்து வீரர் பிரென்டன் மெக்கல்லம் முதலிடம் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் சர்வதேச போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 55 பந்துகளில் 91 ரன்கள் குவித்த நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லம், பேட்டிங் வரிசையில் 793 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (744 புள்ளி) 2-வது இடம் பிடித்துள்ளார்.
இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா (742 புள்ளி) முதன் முறையாக 3-வது இடம் பிடித்துள்ளார். இது ரெய்னாவின் அதிக பட்ச முன்னேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (738 புள்ளி) 4-வது இடம் பிடித்துள்ளார்.
புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து, நியூசிலாந்துடனான ஆட்டத்தில் 26 பந்துகளில் 34 ரன்கள் விளாசிய யுவராஜ்சிங் மீண்டும் தரவரிசைக்கு திரும்பியுள்ளார். அவருக்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் மோர்கன் 9-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சூழற்பந்து வீச்சாளார் ஸ்வான் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன் போத்தா 3-வது இடத்திலும் உள்ளனர். இந்த தரவரிசையில் இந்தியர்கள் யாரும் முதல் இருபது இடங்களுக்குள் இல்லை.
அணித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த இந்திய அணி, நியூஸிலாந்திடம் தோற்றதால் இப்போது 7-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.