
சென்னை: ஒலிம்பிக் வீரர்களுடன் இளம் இந்திய தடகள வீரர்கள் பங்கேற்கவிருக்கும் 52-வது தேசிய சீனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று சென்னையில் தொடங்கியது.
சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி தொடரில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். வழக்கம்போல் இந்த முறையும் இந்திய ரயில்வே அணியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணா பூனியா, ஓட்டப் பந்தய வீராங்கனை தின்டு லூக்கா மற்றும் தடை தாண்டுதல் ஓட்டப் பந்தய வீரர் ஜோசப் ஆப்ரஹாம் உள்ளிட்டோர் ரயில்வே அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தங்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
ஒலிம்பிக்கில் போட்டியில் பங்கேற்ற குண்டு எறிதல் வீரர் ஓம் பிரகாஷ் சிங், மும்முறைத் தாண்டுதல் வீராங்கனை மயூகா ஜானி மற்றும் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கங்கள் வென்ற நீண்டதூர ஓட்டப் பந்தய வீராங்கனை கவிதா ரௌத் உள்ளிட்டோர் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக (ஓஎன்ஜிசி) அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக் நடைப் போட்டியில் பங்கேற்ற கே.டி.இர்ஃபான் சர்வீசஸ் அணிக்கு தலைமை வகிக்கிறார்.
தமிழகத்தில் இருந்து 23 வீராங்கனைகள் உள்பட 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவர்களில் நீளம் தாண்டுதல் வீரர் பிரேம் குமார், தடை தாண்டுதல் ஓட்டப் பந்தய வீராங்கனை காயத்ரி ஆகியோர் முக்கியமானவர்கள்.
இப் போட்டியில் ஆடவர் பிரிவு விளையாட்டுகளுக்கு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை போன்று தகுதிச்சுற்று நடத்தப்படுகிறது.