
நியூயார்க்: யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது.
இதில் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) நான்காம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) மோதினார்கள். செரீனா வில்லியம்ஸ் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். இதனால் அந்த செட்டை அவர் 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றார்.
ஆனால் 2-வது செட்டில் சிறப்பான ஆடி 6-2 என்ற கணக்கில் அசரென்கா வென்றார். இருவரும் தலா 1 செட் வென்றதால் சாம்பியன் பட்டத்தை நிர்ணயிக்கும் 3-வது செட் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இதில் செரீனா 7-5 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். இறுதியில் செரீனா வில்லியம்ஸ் 6-2, 2-6, 7-5. என்ற புள்ளி கணக்கில் யூ.எஸ். ஓபன் பட்டத்தை வென்றார். இது அவருக்கு 4-வது யூ.எஸ்.ஓபன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 1999, 2002, 2008-ம் ஆண்டுகளில் அவர் பட்டம் பெற்று இருந்தார். 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டில் செரீனா கைப்பற்றிய 2-வது கிராண்ட்சிலாம் ஆகும். ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியில் பட்டம் பெற்று இருந்தார். ஒட்டுமொத்தமாக செரீனா கைப்பற்றிய 15-வது கிராண்ட்சிலாம் இதுவாகும். விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தலா 5 முறையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஒருமுறையும் வென்றார்.
பெண்கள் இரட்டையர் பட்டத்தை சாரா இரானி- ராபர்ட்டோ வின்சி (இத்தாலி) ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் இரண்டாம் நிலை வீரரான ஜேகோவிச் (செர்பியா)- மூன்றாம் நிலை வீரரான ஆண்டி முர்ரே (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.
ஒலிம்பிக் சாம்பியன் முர்ரே முதல் கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். நடப்பு சாம்பியனான ஜோகோவிச் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். அவர் இதுவரை 5 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ளார். ஆகையால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!